பெகு: செஸ் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வென்றுள்ள நிலையில், பிரக்ஞானந்தா செய்த தவறு என்ன என்பதை பார்க்கலாம்.
செஸ் உலகக்கோப்பை தொடரில் பிரக்ஞானந்தாவின் வெற்றிக்காக இந்தியாவே காத்திருந்த நிலையில், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பிரக்ஞானந்தாவின் தோல்வியால் இந்திய ரசிகர்கள் பலரும் சோகமடைந்துள்ளனர். இருப்பினும் 18 வயதிலேயே சர்வதேச வீரர்களை திணற வைத்த பிரக்ஞானந்தாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சன் வேண்டுமென்றே டிராவுக்காக ஆடினார். எதற்காக கார்ல்சன் தொடக்கத்திலேயே டிராவுக்கு ஆட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் டிராவுக்காக ஆடி அதிக நேரம் கிடைத்ததன் மூலமாக டை பிரேக்கர் போட்டிக்கு தயாராக இருந்தார் கார்ல்சன். கடந்த இரு நாட்களாக உடல்நிலை சரியில்லை என்று கூறிய கார்ல்சன் இன்று தொடக்கம் முதலே புத்துணர்வுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் டை பிரேக்கரின் முதல் சுற்று ஆட்டத்தில் 40 நகர்வுகள் வரை ஆட்டம் சரிசமமாகவே சென்றது. ஆனால் அதன்பின் கார்ல்சன் ரூக் காயினை ( யானை) மாற்ற, பிரக்ஞானந்தா தனது அடுத்த நகர்வுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடுத்த நகர்வுக்கு 6 நொடிகள் மட்டுமே இருக்க, சிப்பாயை A6 இடத்திற்கு நகர்த்தி தவறு செய்தார். அங்கிருந்து ஆட்டம் கார்ல்சனின் கைகளுக்கு சென்றது.
இதனால் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது சுற்றில் வாழ்வா, சாவா ஆட்டத்தில் களமிறங்கினார். இந்தப் போட்டியில் கார்ல்சன் டிரா செய்தாலே போதும் என்பதால், தொடக்கத்திலேயே சிசிலியன் டிஃபென்ஸ் முறையில் கார்ல்சன் ஆடினார். கறுப்பு காய்களுடன் பிரக்ஞானந்தாவால் வெற்றிபெற முடியாது என்று 21 நகர்வுக்கு பின் தெரிய வர, ஆட்டம் டிராவில் முடிந்தது.