மும்பை : எம்எம்ஏ எனப்படும் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் தற்காப்பு கலை மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சங்கராம் சிங் முதல் வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் எம்எம்ஏ போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
இந்தியர்கள் எப்போதுமே அமிச்சூர் மல்யுத்த போட்டிகளில் விளையாடுவதை கவனம் செலுத்துவார்கள். ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறும் இந்த வகையான மல்யுத்த போட்டிகளில் பதக்கம் பெறுவது இந்திய வீரர்களின் கனவாக இருக்கிறது.

ஆனால் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் இந்த தற்காப்பு கலை கொஞ்சம் வித்தியாசமானது. சாதாரண மல்யுத்த போட்டிகளும் தற்காப்பு கலையும் கலந்து இதில் வீரர்கள் மோதிக் கொள்வார்கள். இந்த வகையான எம்எம்ஏ போட்டிகள் உலக அளவில் மிகவும் பிரபலம் ஆகும். ஆனால் இந்தியாவில் என்ன காரணத்தினாலோ இது பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. இந்த சூழலில் இந்தியாவில் இருந்து எம்எம்ஏ போட்டிக்கு தகுதி பெற்ற சங்கராம் சிங் தற்போது சாதித்து இருக்கிறார்.
இவர் ஏற்கனவே காமன்வெல்த் ஹெவி வெயிட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். இந்த சூழலில் எம்எம்ஏ தான் இனி எதிர்காலம் என்றும் அதில் தான் உலக அளவில் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்த சங்கராம் சிங், அதில் வெற்றி பெற கடும் உழைப்பில் ஈடுபட்டார். இந்த சூழலில் காமா இன்டர்நேஷனல் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் என்ற போட்டி நடைபெற்றது. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் பாகிஸ்தான் வீரர் அலி ராசா நசிர் என்ற வீரரை எதிர்கொண்ட சங்கிராம் சிங் ஒரு நிமிடம் 30 வினாடிகளில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார்.
இதன் மூலம் எம்எம்ஏ விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா தற்போது கால் பதித்திருக்கிறது. வெற்றிக்கு பிறகு பேசிய சங்கராம் சிங், எம்எம்ஏ போட்டிகளில் வெற்றி பெற்று இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த வெற்றியை என் தாய் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். எம்எம்ஏ போட்டியில் இந்தியா சரியான திசையில் செல்வதற்கு என்னுடைய வெற்றி முதல் படியாக இருக்கும்.
எம்எம்ஏ போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கின்றது. தனிப்பட்ட முறையில் இது என்னுடைய பெரும் சாதனையாக கருதுகிறேன். தற்போது சர்வதேச அளவில் நான் முதல் வெற்றியை பெற்று இருக்கிறேன். இதன் மூலம் இந்திய அரசு எம்எம்ஏ போட்டிகளுக்கும் ஆதரவளித்து வீரர்களை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.
அவ்வாறு செய்தால் பல இளைஞர்கள் எம்எம்ஏ போட்டி பக்கம் வருவார்கள். என்னுடைய வெற்றி பல இளம் வீரர்களுக்கு நம்மாலும் இந்த தொடரில் வெல்ல முடியும் என்ற உத்வேகத்தை கொடுக்கும். இதன் மூலம் அவர்கள் கடுமையாக உழைப்பார்கள் என நம்புகிறேன். எம்எம்ஏ போட்டிகளில் வெற்றி பெற பல தடைகளை தாண்டி வர வேண்டும். அதனை இளம் வீரர்கள் செய்வார்கள் என நம்புகிறேன்.
என்னுடைய வெற்றிக்கு, என்னுடைய பயிற்சியாளர் முகேஷ் குமார் தான் காரணம். அவர் கொடுத்த ஆதரவு மூலம் தான் நான் இன்று வென்று இருக்கிறேன். நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் அவர் இருக்கிறார். இதேபோன்று சர்வதேச போட்டிகளுக்கான பயிற்சியாளர் டேவிட்டும், எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் பக்கம் திரும்பிய பிறகு என்னுடைய மல்யுத்த நுணுக்கங்கள் நன்றாகவே வளர்ந்திருக்கிறது. என்னுடைய பயிற்சியாளர்கள் எல்லாம் இல்லை என்றால் என்னால் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது என்று சங்கராம் சிங் கூறியுள்ளார்.