அம்மாவானால் என்ன... அசத்தலாக பட்டம் வென்ற உக்ரைன் வீராங்கனை!
தாஷ்கன்ட்: ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் டென்னிஸ் மைதானத்தில் களமிறங்கி பட்டம் வெல்வது என்பது மிகவும் கடினம். அந்த சாதனை இரண்டாவது முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
அட, சமீபத்தில் தாயான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அதுக்குள்ள விளையாட வந்து பட்டமும் வென்று விட்டாரா.. அதுதான் இல்லை.
உக்ரைன் வீராங்கனை கேட்டரீனா போந்தரெங்கோ இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளார். உலக தரவரிசையில், 133 வது இடத்தில் உள்ளார், 31 வயதாகும் கேட்டரீனா.

பிரபலம் இல்லாமல் பிரபலம் ஆனவர்
இவர் ஒன்றும் மிகவும் பிரபலமான வீராங்கனை இல்லை என்றாலும், ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் விளையாட வந்ததுடன், மகளிர் உலகச் சுற்று பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

டபுள் வீராங்கனை
2O08ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட் போட்டிகளில் தனிநபர் பிரிவில் இவருடைய அதிகபட்ச சாதனை, 2009ல் யுஎஸ் ஓபனில் காலிறுதி வரை நுழைந்ததே.
இதற்கு முன், மகளிர் உலகச் சுற்றில், பிர்மிங்ஹாம் ஓபன் பட்டத்தை, 2008ல் வென்றார்.

தாய்மையால் பிரேக்
2012ல் குழந்தை பிறந்ததால், சிறிது ஓய்வு கொடுத்தவர். 2014ல் மீண்டும் களமிறங்கினார். தற்போது மகளிர் உலகச் சுற்றில் தாஷ்கண்ட் ஓபன் பட்டம் வென்றுள்ளார். கடந்த, 2011ல் கிம் கிளிஜ்ஸ்டர், 2011ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். அதன்பிறகு, தாயான ஒருவர் பட்டம் வெல்வதே இதுவே முதல் முறையாகும்.

செரீனா முறியடிப்பார்
அடுத்தாண்டு ஜனவரியில் இருந்து மீண்டும் விளையாடப் போவதாக, செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார். அதனால், இந்த சாதனை அடுத்த ஆண்டே முறியடிக்கப்படும் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications