டிராவிட் விலகலுக்கு 'வெங்க்ஸ்' காரணம்-மோரே
மும்பை:
கேப்டன் பொறுப்பிலிருந்து டிராவிட் விலகியதற்கு, இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் திலீப் வெங்சர்க்கார்தான் காரணம் என முன்னாள் தலைவரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான கிரண் மோரே குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பதவி விலகியவர்கள் யாருமே சந்தோஷத்துடன் அதை செய்ததில்லை, போகவும் கிரிக்கெட் வாரியம் விட்டதில்லை. ஏதாவது ஒரு மனச் சோர்வை உருவாக்கி விரட்டி விட்டு விடுவார்கள்.
ஆரம்பத்திலிருந்தே இது தொடர்ந்து கொண்டுள்ளது. இதில் ரொம்பவம் அவமானப்பட்டவர் கங்குலி மட்டுமே. இந் நிலையில், சமீபத்தில் டிராவிட் தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
அவர் விலகியதற்கு வெங்சர்க்கார்தான் காரணம் என்று முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் கிரண் மோரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டிராவிட் திடீரென்று ராஜினாமா செய்ததற்கு வெங்சர்க்கார் தான் காரணம்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்ததற்கு, டிராவிடை அவர் கடுமையாக விமர்சித்தார். அத்தோடு பல வகையான தொல்லைகளையும் கொடுத்தார்.
டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்காக டிராவிடை அவர் பாராட்டவில்லை. அதை விட்டு விட்டு டிரா ஆன 3வது டெஸ்ட்டில் ஏன் பாலோ-ஆன் கொடுக்கவில்லை என்று திட்டியுள்ளார் வெங்சர்க்கார்.
ஒரு அணிக்கு கேப்டன் என்றால் அவர் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் பிறகு ஏன் அவரை கேப்டனாக நியமனம் செய்ய வேண்டும். வெற்றி, தோல்வி என்பது விளையாட்டில் சகஜம். யாராலும் தொடர்ந்து வெற்றி வாகை சூட முடியாது என்றார் கிரண் மோரே.
மோரேவின் புகார் புது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனது தரப்பு நிலையை நாளை நடைபெறவுள்ள கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் விளக்கவுள்ளாராம் வெங்சர்க்கார்.
நாளைய கூட்டத்தில் புதிய கேப்டனைத் தேர்வு செய்யவும் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அனேகமாக சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக நியமிக்கப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications