
ஓய்வை அறிவித்த தோனி
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் ஓய்வு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் அவர் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொடர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வரும் 2022ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.

தோனியின் ஓய்வு அறிவிப்பு
வரும் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த டி20 உலக கோப்பை, கொரோனா வைரஸ் காரணமாக வரும் 2022ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா இந்த தொடரை நடத்தவுள்ளது. இந்நிலையில், டி20 உலக கோப்பையில் தோனி இடம்பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொடர் தள்ளி போனதும் அவரது ரிடையர்மெண்டிற்கு காரணமாக இருக்கலாம் என்று அவரது நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் அதிக நேரத்தை செலவிடுவார்
தற்போது தோனி மனதளவில் மிகவும் பிரீயாக இருப்பார் என்றும் பாண்டே தெரிவித்துள்ளார். ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக உள்ள தோனி சுதந்திர தினத்தில் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து ராணுவத்தில் அவர் அதிக நேரத்தை செலவிடுவார் என்றும் பாண்டே கூறியுள்ளார். கடந்த ஆண்டில் கிரிக்கெட்டிலிருந்து இரண்டு மாதங்கள் இடைவெளி பெற்று ராணுவ வீரர்களுடன் இணைந்து அவர் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிக விளம்பரங்களில் ஒப்பந்தம்
இந்நிலையில், ரிடையர்மெண்ட் ஆனதால், அவருடைய மதிப்பு சற்றும் குறையவில்லை என்றும் பாண்டே தெரிவித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாகக தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடாதபோதும், 10 புதிய நீண்டகால விளம்பரங்களில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரை ரசிகர்கள் ஒரு வீரராக பார்ப்பதில்லை என்றும் அவர் இளைஞர்களின் கனவு நாயகனாகவே பார்க்கப்படுவதாகவும் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications











