வாஷிங்டன்: அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் சுவிஸ் வீரரான வாவ்ரிங்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முன்னணி வீரரான ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில் தர வரிசையில் 5 ஆவது இடத்தில் இருக்கும் சுவிஸ் வீரரான வாவ்ரிங்கா, அமெரிக்க வீரரான டொனால்ட் யங் உடன் மோதினார்.
போட்டியின் முதல் செட்டை வாவ்ரிங்கா கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டை டொனால்ட் யங் கைப்பற்றி வாவ்ரிங்காவுக்கு நெருக்கடி கொடுத்தார். இந்நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது செட்டில் சிறப்பாக விளையாடிய வாவ்ரிங்கா, அவற்றை 6-3, 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி, மூன்று ஒன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில், தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே, தரவரிசையில் 15வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் கெவின் ஆண்டர்சனுடன் மோதினார். ஆட்டத்தின் முதல் இரண்டு செட்டுகளை கெவின் 7-6, 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார்.
டை பிரேக்கர் வரை நீடித்த மூன்றாவது செட்டை, 7-6 என்ற புள்ளிக் கணக்கில் முர்ரே போராடி கைப்பற்றினார். இருப்பினும் நான்காவது செட்டில் சிறப்பாக விளையாடிய ரஷ்யா வீரர் கெவின் அதனை 7-6 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி, மூன்று ஒன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
முன்னணி விரர்களான ஆண்டி முர்ரே மற்றும் ரஃபேல் நடால் தோல்வியடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.