டெல்லி: ஊக்கமருந்து புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் அனுமதி வழங்கியுள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்தமாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக இந்த தொடரில் ஆண்கள் 74 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நர்சிங் யாதவ் ஊக்க மருந்து பயன்படுத்தியதால் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக பிரவீன் ராணா ஒலிம்பிக்கில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தேசிய ஊக்க மருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நர்சிங் யாதவ் பிரச்சனை குறித்து விசாரணை நடத்தியது.
விசாரணையில், தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார். எனவே அவர் மீது எந்த தவறும் இல்லை. அவரை ஒலிம்பிக்கில் அனுமதிக்கலாம்' என்று தெரிவித்துள்ளது.
இதனால் அவர் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்திய மல்யுத்த பெடரேஷன் அனுமதியைப் பெற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் இதற்கான முயற்சியை செய்யும்.