டெல்லி: 2025 தேசிய விளையாட்டு தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் ஆடவர் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் 16.50 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை வென்று இருந்தார். அவர் நமது மைகேல் (myKhel) தளத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்தார்.
அவரிடம் நீங்கள் தொடர்ந்து தேசிய விளையாட்டுத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வருகிறீர்கள். அது குறித்து எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்ட போது, "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 2025இல் இதுதான் எனது முதல் தொடர் இனிவரும் தொடர்களில் இன்னும் சிறப்பான செயல்பாட்டை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்." என்றார்

அப்துல்லா அபூபக்கர் போன்ற பிற மூத்த வீரர்கள் இந்த முறை தேசிய விளையாட்டு தொடரில் விளையாடாதது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரவீன், "மற்றவர்கள் விளையாடுகிறார்களா, இல்லையா? என்பதை பற்றி நான் எப்போதும் பார்க்க மாட்டேன். நான் எப்படி விளையாடுகிறேன் என்பதை மட்டும் பார்த்து விட்டு செல்வேன். இது அவர்களைப் பற்றியது அல்ல. என்னை பற்றியது. நான் என்ன செய்கிறேன் என்பதை மட்டுமே பார்ப்பேன்." என்றார்.
தேசிய விளையாட்டில் உங்கள் செயல்பாட்டை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதுதான் இந்த ஆண்டின் முதல் தொடர். இதில் உங்கள் செயல்பாடு திருப்திகரமாக இருந்ததா? என்று கேட்டபோது, "நான் மற்ற விஷயங்களைப் பற்றி யோசிப்பதில்லை. இந்த விளையாட்டில் அதிக தூரம் தாண்ட வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருக்கும். எனது பலம் மற்றும் வேகத்தை அப்படியே இனிவரும் போட்டிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் உள்ளது." என்றார்.
அடுத்து ஆசிய சாம்பியன்ஷிப் உள்ளது. அதற்கான சிறப்பு பயிற்சிகள் எதுவும் மேற்கொள்கிறீர்களா? என்று கேட்டபோது, "நான் எப்போதும் எனது 100 சதவீதத்தை அளிப்பேன். எல்லா தொடர்களுக்கும் நான் அதிக முயற்சியை வெளிப்படுத்துவேன்." என்றார்.
நீங்கள் ட்ரிபிள் ஜம்ப் விளையாட்டில் இந்தியாவின் முகமாக இருக்கிறீர்கள். இது உங்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறதா? என்று கேட்டபோது, "எப்போதுமே அழுத்தம் அதிகமாக தான் இருக்கும். அதற்கு நாம் எப்போதும் இரையாகி விடக்கூடாது. கடந்த ஆண்டு ஒலிம்பிக் தொடருக்கு முன் அதைத்தான் நான் செய்தேன். எப்போதும் பயிற்சி மற்றும் விளையாட்டுகளை அமைதியான முறையில் மேற்கொண்டால் நாம் நன்றாக செயல்படலாம்." என்றார்.
இந்த விளையாட்டை தாண்டி உங்களது ஈடுபாடு எதில் அதிகம் உள்ளது? உங்கள் ஆர்வம் என்ன? என்று கேட்டபோது. சிரித்த பிரவீன் சித்திரவேல், அந்த கேள்விக்கு அடுத்த முறை பதில் அளிப்பதாக கூறி விடைபெற்றார்.