அறைக்கு அழைத்துச் செல்வார்
கடந்த மே மாதம், சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் 19 வயதுடைய பெண் ஒருவர் நாகராஜன் மீது புகார் அளித்திருந்தார். அதில், "சென்னை நந்தனத்தைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன் (59), கடந்த 2013 முதல் 2020 வரை சென்னை பிராட்வே பச்சையப்பன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தடகள பயிற்சி அளித்து வந்தார். அவர் எனக்கும் பயிற்சி அளித்தார். பல சமயங்களில், பயிற்சி முடிந்த பிறகு என்ன மட்டும் தனியாக அழைத்து, பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாகக் கூறி தனி அறைக்கு அழைத்துச் செல்வார். அங்கு என்னை உட்கார வைத்தும், படுக்க வைத்தும் மசாஜ் என்கிற பெயரில் அத்து மீறுவார். அதை நான் மறுத்தபோதும் தன்னுடன் ஒத்துழைத்தால் தடகள போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிப்பேன் என்று கூறி பாலியல் சீண்டல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். என்னைப் போலவே மற்ற சில வீராங்கனைகளிடமும் நாகராஜன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
மனவேதனை அடைந்தேன்
இதையடுத்து, தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு மேலும் 7 வீராங்கனைகள் அவர் மீது புகார் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், The Indian Express நிறுவனம் பாதிக்கப்பட்ட 2 வீராங்கனைகளிடம் பேசியுள்ளது. அந்த இரண்டு வீராங்கனைகளுக்கு, வெவ்வேறு காலங்களில் நாகராஜனால் பயிற்றுவிக்கப்பட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் பேசுகையில், "நான் 16 வயதுக்குட்பட்ட தேசிய சாதனையை முறியடித்தேன். அப்போதுதான் பாலியல் அத்துமீறல்கள் தொடங்கியது. அவர், 'பயிற்சி முடிந்த பிறகும் நீங்கள் இங்கே இருங்கள். அதனால் நீங்கள் மேலும் பயிற்சி பெறலாம்' என்று கூறுவார். எனக்கு முழங்கால் வலி இருந்தால், அவர் 'நான் வலியைக் குறைப்பேன்' என்று சொல்வார். இதற்காக அவர் மசாஜ் செய்வார். அவர் என் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவார், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். இதனை என் பெற்றோர்களிடம் சொன்னால், அவர்கள் மன வேதனை அடைவார்கள் என்பதால் அவர்களிடமும் சொல்லவில்லை. முதல் முறையாக என்னிடம் அவர் அத்துமீறிய போது, எனக்கு வயது 15.
மடியில் உட்கார வைப்பார்
பயிற்சியாளர் நாகராஜன் மீதிருந்த பயத்தால் அந்த வீராங்கனைக்கு, அவர் அத்துமீறிய போதெல்லாம் எப்படி மறுப்பு சொல்வது என்று தெரியவில்லை. சாம்பியன்களை உருவாக்கும் நாகராஜனின் சாதனை காரணமாக அவள் ஆரம்பத்தில் மிரட்சியுடனேயே பயிற்சியாளரை பாத்திருக்கிறார். "அவர் என் மீது கைகளை வைக்கத் தொடங்கினார். அவர் என்னை அவரது மடியில் உட்கார வைப்பார். நான் ஒரு தந்தையைப் போன்றவன்" என்று அவர் என்னிடம் கூறினார். அந்த வயதில் எனக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. இப்போது குழந்தைகளுக்கு 'good touch' மற்றும் 'bad touch' என்றால் என்ன என்று கற்பிக்கிறார்கள் ஆனால் அந்த நேரத்தில் அப்படி எதுவுமே எனக்கு தெரியாது. பயிற்சியின் முடிவில் நான் மைதானத்தை விட்டு ஓடிவிட்டேன். அவரிடம் திரும்பி பேச கூட எனக்கு பயமாக இருந்தது.
கடவுளாக பார்த்தனர்
இந்த அத்துமீறல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. ஒரு கணவன் மனைவி போல என்னை நெருக்கமாக இருக்கச் சொன்னார். நான் சிறப்பாக விளையாடியதால், என் பெற்றோர், அவரை ஒரு கடவுளாகவே பார்த்தனர். அவரைப் பற்றி என் பெற்றோரிடம் சொன்னபோது, அவர் அவர்களிடம், 'உங்கள் மகளின் நடத்தை நன்றாக இல்லை. அவள் பசங்களோடு பேசுகிறாள்' என்றார். அவர் என்னை ஊடகங்களுடன் பேச அனுமதிக்கவில்லை. என்னிடம் மொபைல் போன் இல்லை, எனவே யார் அழைத்தாலும் என் தந்தை மூலமாகவோ அல்லது அவர் மூலமாகவோ தான் பேச முடியும்.
நானும் செருப்பால் அடித்தேன்
பிறகு நான் முதன் முறையாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, நான் சென்று நாகராஜனிடம், 'நீங்கள் பாலியல் துஷ்பிரயோகத்தைத் தொடர்ந்தால், நான் அதை ஊடகங்களுக்கு தெரிவிப்பேன்' என்று சொன்னேன். அதற்கு அவர் என்னிடம், நீயும் அதற்கு ஒத்துழைத்ததாக நான் மக்களிடம் கூறுவேன் என்று என்னை மிரட்டினார். நான் அழ ஆரம்பித்தேன். இறுதியில், நான் கிளப்பை விட்டு வெளியேற முடிவு செய்தபோது, பயிற்சியாளர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். அந்த நேரத்தில் அவர் என் கால்களில் விழுந்தார். அவர் தன்னை ஒரு செருப்பால் அடித்துக் கொண்டார். நானும் அவரை அதே செருப்பால் அடித்தேன். அதன் பிறகு பாலியல் துஷ்பிரயோகம் நிறுத்தப்பட்டது. பயிற்சியாளரால் நான் மட்டுமே துஷ்பிரயோகம் செய்யப்படுகிறேன் என்று நினைத்தேன். இதைப் பற்றி நான் என் பெற்றோரிடம் முன்பே கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் அதை முதலில் நம்பவில்லை. இந்த பிரச்சினை வெளிவந்தபோது (பயிற்சியாளருக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு) நான் ஊடகங்கள் அல்லது காவல்துறையினரிடம் பேசலாமா என்று என் பெற்றோர் கவலைப்பட்டனர். கற்பனை செய்து பாருங்கள், 15 ஆண்டுகளுக்கு முன்பு துஷ்பிரயோகம் நடந்தாலும் என் பெற்றோர் பயப்படுகிறார்கள்" என்றார்.
பாலியல் அத்துமீறல்
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய 2வது வீராங்கனை, நாகராஜன் பயிற்சியளித்த பள்ளியில் சேர்ந்தபோது, அவள் 7 ஆம் வகுப்பே படித்ததாக கூறியுள்ளார். அப்போதே அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருக்கிறார். "நான் 8 ஆம் வகுப்பில் இருந்தபோது, நாகராஜன் 'நீ நீளம் தாண்டுதல் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன், ஆகையால் தினம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பயிற்சிக்கு வந்துவிடு' என்றார். எல்லோரும் மாலை 4 மணிக்கு அங்கு சென்றால், நான் 3. மணிக்கு அங்கு செல்வேன். அதனால் நான் அவருடன் தனியாக இருந்தபோது பாலியல் துஷ்பிரயோகம் தொடங்கியது. இதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, நான் அவமானமடைந்தேன், நான் அதிர்ச்சியடைந்தேன். என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
ஏதேதோ செய்தார்
நான் அவரைத் தவிர்க்கத் தொடங்கியவுடன், அவர் என் பெற்றோரிடம் ஒய்எம்சிஏவுக்கு சிறப்பு உடற்பயிற்சி சோதனைகளுக்கு என்னை அழைத்துச் செல்வதாக கூறினார். அவர் என்னை ஒய்எம்சிஏவில் உள்ள அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னிடம், மேற்கத்திய நாடுகளில் இந்த புதிய மசாஜ் நுட்பம் உள்ளது, இது நீ விரைவாக மீள உதவுகிறது என்று கூறி ஏதோதோ செய்தார். இது நடந்தபோது நான் மனமுடைந்தேன். இது பாலியல் துஷ்பிரயோகம் மட்டுமல்ல, மன அளவிலும் அவர் என்னை மிகவும் பாடுபடுத்திவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.