டெல்லி: இந்திய விளையாட்டு வீரர்கள் பலருக்கும் மத்திய அரசின் உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு விருதுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் 2022ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியானது.
அர்ஜுனா விருதுகள், துரோனாச்சாரியா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, தயான் சந்த் விருது, கேல் ரத்னா விருது போன்றவை குறித்த அறிவிப்புகள் வெளியானது.
இந்நிலையில் அவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. வழக்கம் போல நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர், திரௌபதி முர்மு, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கினார். அதன்படி 25 பேருக்கு சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் தமிழகத்தை சேர்ந்த முன்னணி செஸ் வீரர் பிரக்யாஞந்தாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. குத்துச்சண்டை, பாரா துப்பாக்கிச்சுடுதல், வில்வித்தை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இருந்து 4 பயிற்சியாளர்களுக்கு துரோனாச்சாரியா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு தயான் சந்த் விருதுகள் வழங்கியது.
இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான அசந்தா சரத் கமலுக்கு விளையாட்டு துறையின் மிக உயரிய விருதான கேல் ரத்னா வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.