வாஷிங்டன்: என்பிஏ தொடரில் மின்னசோட்டா டிம்பர்வோல்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் எட்வர்ட்ஸ் ரசிகர்களை பார்த்து மோசமான சைகை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து என்பிஏ நிர்வாகம் தரப்பில் ரூ.42.6 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி அவ்வப்போது ரசிகர்களையும், எதிரணி வீரர்களையும் பார்த்து மோசமான வார்த்தைகளையும், சைகைகளையும் செய்வார். அண்மையில் கூட பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பார்த்து விராட் கோலி மோசமாக கிண்டல் செய்தார். ஆனால் விராட் கோலி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் என்பிஏ தொடரில் ரசிகர்களை பார்த்து நட்சத்திர வீரர் மோசமான சைகை மற்றும் கெட்ட வார்த்தையில் திட்டியதற்காக ரூ.42.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்பிஏ தொடரில் பிளே ஆஃப் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மின்னசோட்டா டிம்பர்வோல்ஸ் அணியை எதிர்த்து லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணி களமிறங்கியது.
இந்த போட்டியில் மின்னசோட்டா டிம்பர்வோல்ஸ் அணி 117-95 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டிக்கு இடையே மின்னசோட்டா டிம்பர்வோல்ஸ் அணிக்காக ஆடிய ரூடி குபெர்ட்டை ரசிகர் ஒருவர் வம்புக்கு இழுத்தார். இதனால் சக வீரர் எட்வர்ட்ஸ் ரூடி-க்கு ஆதரவாக ரசிகருடன் மோதலில் ஈடுபட்டார்.
அப்போது அந்த ரசிகர்களை பார்த்து அறுவறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அருவருக்கத்தக்க வகையில் சைகையில் ஈடுபட்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிய நிலையில், எட்வர்ட்ஸ்-க்கு ரூ.42.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்த சீசனில் எட்வர்ட்ஸ்-க்கு மட்டும் மொத்தமாக ரூ.2.73 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியது, நேர்காணல்களில் மோசமான வார்த்தைகளை பேசியது, ரசிகர்களுடன் மோதியது, நடுவர்களுடன் வாக்குவாதம் என்று ஏராளமான சர்ச்சைகளில் ஈடுபட்டதால் தொடர்ச்சியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் என்பிஏ ரசிகர்கள் அவரின் செயல்பாடுகளால் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.