மும்பை: ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் தொடரில் மற்ற வீரர்கள் வெண்கலம் பதக்கத்தை வென்று அசத்திய நிலையில், தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதித்தார்.
இதன் மூலமாக நீரஜ் சோப்ராவின் இந்தியாவின் மிகமுக்கியமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார். 26 வயதே ஆகியிருப்பதால், லாஸ் ஏஞ்சலஸில் நடக்கும் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா அடுத்த பதக்கத்தை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு தரப்பில் நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்கு ரூ.4 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது.

ஐரோப்பாவில் நீரஜ் சோப்ரா பயிற்சி பெற்று வரும் நிலையில், பலரும் இந்தியாவிலேயே சர்வதேச தரத்திலான பயிற்சி மையங்களையும், பயிற்சியாளர்களையும் உருவாக்க வேண்டும் என்று பேசி வந்தனர். இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் பெங்களூரில் புதிய என்சிஏ மையம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி மைதானங்கள், ஃபிட்னஸ் சென்டர்கள், உடற்பயிற்சி கூடம், மருத்துவ சிகிச்சை, சர்வதேச மைதானம், உள்விளையாட்டு அரங்கம் என்று மிரட்டலாக கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், என்சிஏவில் ஒலிம்பிக் வீரர்களான நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் பயிற்சி மேற்கொள்ளவும் தேவையான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் என்சிஏ மைதானம் மிகச்சிறப்பாக கட்டமைக்க 2008ஆம் ஆண்டிலேயே இடம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் பிசிசிஐ அதிகாரத்தில் இருந்தவர்கள் யாரும் அதற்கான முதற்கட்ட பணிகளை கூட செய்யவில்லை. தற்போது 2022ஆம் ஆண்டு ஜெய் ஷா அடிக்கல் வைத்த நிலையில், பணிகள் அனைத்தும் விரைந்து செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோல் என்சிஏ மைதானங்கள் அடுத்தக் கட்டமாக வாரணாசியில் அமைக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் வடகிழக்கு மாநிலங்களிலும் என்சிஏ கட்டமைப்பை உருவாக்க ஜெய் ஷா திட்டமிட்டு வருவது தெரிய வந்துள்ளது. மேலும், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.