Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்.. நீரஜ் சோப்ரா ஏமாற்றம்.. மற்றொரு இந்திய வீரர் சச்சின் 4வது இடம்
டோக்யோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி எந்த ஒரு பதக்கத்தையும் கைப்பற்ற வில்லை. இந்த தருணத்தில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா பதக்கத்தை பெற்று தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இறுதிப் போட்டியில் மிகப்பெரிய ஏமாற்றம் அவருக்கு கிடைத்தது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக நீரஜ் சோப்ரா களம் இறங்கினார். ஆனால் அவரால் அதிகபட்சமாக 84.03 மீட்டர் தூரம் தான் அதிகபட்சமாக ஈட்டியை எறிய முடிந்தது.

இதன் மூலம் அவர் எட்டாவது இடத்தையே பிடித்தார். அதேபோன்று நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஆன பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதிம் அதிகபட்சமாக 82.75 மீட்டர் தூரம் வீசி 10ஆவது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் 2012 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற டிரினாட் டோபாகோ வீரர் வால்காட் இந்த தொடரில் 88.16 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
வெள்ளி பதக்கத்தை கிரீனிடாவை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் கைப்பற்றினார். இவர் 87.38 மீட்டர் தூரம் வீசினார். வெண்கல பதக்கத்தை அமெரிக்க வீரர் தாம்ப்சன் வென்றார். இவர் 86.67 மீட்டர் தூரம் வீசினார். இதுபோன்று உலகின் நம்பர் ஒன் வீரரான ஜூலியன் வெப்பர் 86.10 மீட்டர் தூரம் வீசி ஐந்தாவது இடத்தை பிடித்தார்.இதனிடையே நீரஜ் சோப்ரா மட்டுமில்லாமல் மற்றொரு இந்திய வீரரான சச்சின் யாதவும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் ஜொலித்தார்.
சச்சின் யாதவ் பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதிகபட்சமாக 86.27 மீட்டர் தூரம் வீசி நான்காவது இடத்தை பிடித்தார். வெறும் 0.40 மீட்டர் தூரம் வித்தியாசத்தில் சச்சின் யாதவ் வெண்கல பதக்கத்தை இழந்தார். இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் சோபிக்க தவறியது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications