ஹங்கேரி : 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரி நாட்டில் உள்ள புத்த பெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் தங்க மகனான நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலே 88.77 மீட்டர் தூரம் அளவில் வீசி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்தத் தொடரில் இறுதிப் போட்டியில் தகுதி பெற 83 மீட்டர் தூரம் வீசி இருக்க வேண்டும். ஆனால் நீரஜ் சோப்ரா அதையும் தாண்டி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் ஒலிம்பிக் தொடரில் தகுதி பெற 85.50 மீட்டர் தூரம் வீசி இருக்க வேண்டும். இதனையும் நீரஜ் சோப்ரா தாண்டி இருப்பதால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரிலும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.
இந்த தொடரில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜேக்கப் அதிகபட்சமாக 89.91 மீட்டர் வீசி முதல் இடத்தை பிடித்திருந்தார். தற்போது நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை யாருமே 90 மீட்டர் என்ற தூரத்தில் வீசவில்லை.அதனை இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்ற நீரஜ் சோப்ரா, ஆசிய போட்டி, காமன்வெல்த் போட்டி, டைமண்ட் லீக் போட்டு என அனைத்திலுமே சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். எனினும் உலக தடகள சாம்பியன்ஸ் போட்டியில் நீரஜ் சோப்ரா இதுவரை தங்க பதக்கத்தை வெல்லவில்லை. அதனை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்திய வீரர்களும் விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.