டெல்லி: இந்தோனேசியாவில் நடக்க உள்ள 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில், இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்று அணியை வழிநடத்தும் கவுரவம், 20 வயதாகும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பங்க் நகரங்களில் வரும் 18ம் தேதி துவங்கி, செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் நடக்கும் அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணியை, தேசியக் கொடியை ஏந்தி வழிநடத்தும் கவுரவம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் தங்கம் மற்றும் அதைத் தொடர்ந்து பின்லாந்தில் நடந்த சாவோ கேம்ஸில் தங்கம் வென்று அசத்தினார் 20 வயதாகும் நீரஜ் சோப்ரா.
2014ல் தென்கொரியாவின் இன்சியானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது, ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.
கடந்த ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் உள்பட 57 பதக்கங்களை வென்றது.