புபனேஷ்வர் : பிரபல ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா ஒடிசாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பையில் பங்கேற்று ஈட்டி எறிதலில் வழக்கம் போல் தங்கம் வென்றார். ஆனால் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றும் தமது செயல்பாடு குறித்து விரக்தி அடைந்தார்.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, தற்போது பாரிசில் ஜூலை மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தன்னுடைய பதக்கத்தை தக்க வைக்க கடும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக நீரஜ் சோப்ரா பல்வேறு தொடர்களில் பங்கேற்கிறார். அண்மையில் தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா, ஓய்வே இன்றி தற்போது இந்தியாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பையில் பங்கேற்றார். இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நீரஜ் சோப்ரா இந்தியாவில் விளையாடினார்.
எனினும் இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா சிறந்த செயல்பாடாகவே 82.27 மீட்டர் தூரம்தான் ஈட்டியை எறிந்தார். இது இவருக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தாலும், இவருடைய தனிப்பட்ட செயல்பாட்டுகளில் இது மிகவும் குறைவானது ஆகும். இதனால் விரத்தி அடைந்த நீரஜ் சோப்ரா, தாம் தங்கம் வென்றாலும் என்னுடைய செயல்பாடு தமக்கு திருப்தி அளிக்கவில்லை.
அதனை பற்றி பேச வேண்டாம். இது என்னுடைய சிறந்த செயல்பாடு அருகே கூட இல்லை என்று கூறி விரக்தி அடைந்தார். இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், இந்தியா போன்ற காலநிலை உள்ள இடத்தில் தான் போட்டியில் பங்கேற்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாகவும், தோகாவிலிருந்து தாம் வந்து எந்த ஓய்வும் இன்றி இந்த தொடரில் பங்கேற்றதாகும் நீரஜ் சோப்ரா கூறினார்.
இந்தத் தொடரில் பங்கேற்கும் போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சரியான நிலையில் இல்லை என்று கூறியுள்ள நீரஜ் சோப்ரா, வரும் மே 28ஆம் தேதி செக்குடியரசு நாட்டில் நடைபெறும் கோல்டன் ஸ்பைக் தொடரில் பங்கேற்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த தொடருக்கு இன்னும் பத்து நாட்கள் இருப்பதால் அதற்குள் தமது உடலுக்கு ஏற்ப ஓய்வு கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.
இந்தத் போட்டியில் தமது செயல்பாடு சரியாக இல்லை என்றாலும் இந்தியாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கால சூழலுக்கு ஏற்பவே தமது உடல் செயல்பட்டதாகவும் நீரஜ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முன் பல சர்வதேச போட்டிகளில் தம் விளையாட இருப்பதாக நீரஜ் கூறியுள்ளார்.
ஜூன் மாதத்தில் பின்லாண்டில் ஒரு தொடரிலும் ஜூலை மாதத்தில் பாரிசில் டைமண்ட் லீக் போட்டியிலும் பங்கேற்பேன் என்றும் கூறியுள்ளார். அதில் தமது செயல்பாடை முன் வைத்து தான் எந்த போட்டியில் விளையாடலாம்? எந்த போட்டியில் இருந்து விலகலாம்? என்பது குறித்து முடிவெடுப்பேன் என்றும் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.