திருவனந்தபுரம்: ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடியயோது காயம் அடைந்த பிரேசில் அணி வீரர் நெய்மார் கேரளாவுக்கு வந்து ஆயுர்வேத சிகிச்சை பெற உள்ளதாக கூறப்படுகிறது.
ஃபீஃபா உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் பிரேசில், கொலம்பியா அணிகள் மோதின. அப்போது கொலம்பியா அணி வீரரான யுவான் கமிலோ ஜுனிகா தனது முழங்காலால் இடித்ததில் நெய்மாரின் முதுகெலும்பு முறிந்தது. இதனால் நெய்மார் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. அவர் இல்லாமல் பிரேசில் அணி அரையிறுதி போட்டியில் ஜெர்மனியுடன் மோதி 7-1 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் நெய்மாருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்குமாறு பிரேசில் கால்பந்து சம்மேளனம் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை தொடர்பு கொண்டதாக அம்மாநில டிவிகளில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை சாண்டி மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் நெய்மாருக்கு இங்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நான் சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ். சிவக்குமாரிடம் பேசியுள்ளேன். அவர் கேரளாவில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரி மருத்துவர்களிடம் பேசியுள்ளார். டாக்டர்கள் நெய்மாரின் காயம் குறித்து இணையதளத்தில் பார்த்து அதற்கு எந்த வகையான சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்தனர்.
நெய்மாருக்கு சிகிச்சை அளிக்க நாங்கள் தயார் என்ற எங்களின் விருப்பத்தை தெரிவிக்க உள்ளோம். இதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றார்.