நெய்மர் மீது பார்சிலோனா வழக்கு தொடர காரணம் என்ன?
பார்சிலோனா: உலகின் மிகப் பிரபலமான கால்பந்து வீரர் நெய்மரை, 1,677 கோடி ரூபாய்க்கு, பார்சிலோனா கால்பந்து அணியிடமிருந்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மன் அணி (பி.எஸ்.ஜி.) அணி விலைக்கு வாங்கியது தற்போது பெரிய செய்தி அல்ல.
தங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக, நெய்மர் மீது, 65 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பார்சிலோனா கால்பந்து அணி வழக்கு தொடர உள்ளதுதான் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் மிகவும் பிரபலம். அங்குள்ள கால்பந்து கிளப் அணிகள், உலகின் பல நாடுகளைவிட, மிகப் பெரிய பட்ஜெட்டுடன் உள்ளன. இந்த அணிகளிடம் உள்ள பணத்தைக் கொண்டு, பல சிறிய நாடுகளையே விலைக்கு வாங்கிட முடியும்.
ஒரு சிறிய உதாரணம்தான், பார்சிலோனா கிளப் அணியின் நட்சத்திர வீரரான நெய்மரை, 1,677 கோடி ரூபாய்க்கு பி.எஸ்.ஜி., அணி விலைக்கு வாங்கியது.
பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ, ககா, ராபர்டோ கார்லோஸ் என்று பல ஜாம்பவான்களை, கால்பந்துக்கு அளித்துள்ள பிரேசில் நாட்டின் சமீபத்திய கொடைதான், நெய்மர்.
தற்போது 25 வயதாகும் நெய்மர், 17 வயதிலேலேயே தொழில்முறை கால்பந்து விளையாட துவங்கிவிட்டார். சான்டோஸ் மற்றும் பார்சிலோனா ஆகிய இரண்டு கிளப்களுக்காக, 411 போட்டிகளில் விளையாடி, 241 கோல்கள் அடித்துள்ளார்.
பிரேசில் அணிக்காக விளையாடிய 77 போட்டிகளில், 52 கோல்களை அடித்து,சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். உலகின் மிகப் பெரிய, பணக்கார கால்பந்து கிளப்பான பார்சிலோனாவுக்காக, 2021 வரை விளையாடுவதற்கு, கடந்த ஆண்டுதான் ஒப்பந்தம் செய்தார்.
இந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, பி.எஸ்.ஜி., அணி, அவரை விலைக்கு வாங்கியுள்ளது.
இதுபோல, பல முன்னணி கிளப்களுக்காக விளையாடிய வீரர்களை, தங்களுடைய அணிக்கு இழுப்பதில், பார்சிலோனா, பி.எச்.டி., முடித்துள்ளது. தங்களிடமே, தங்களுடைய டெக்னிக்கை பயன்படுத்தியுள்ளது பார்சிலோனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக, இதுபோல, ஒரு அணிக்காக விளையாடும் வீரரை, மற்றொரு அணி வாங்கினால், ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த வீரர் செலுத்த வேண்டிய தொகையை, வாங்கும் அணி வழங்கும்.
ஆனால், பண பலத்துடன், அதிகார பலமும் உள்ளதால், பார்சிலோனா அணி, இதற்கெல்லாம் கவலைப்பட்டதில்லை. எதிரணியை பலவீனப்படுத்த, அந்த அணியின் முக்கிய வீர்ரகளை, மிரட்டி தங்களுடைய அணிக்கு இழுத்த வரலாறு, பார்சிலோனாவுக்கு உண்டு. அதேபோல், வீரர்களை இழுத்ததற்காக, எதிரணிகளுக்கு தர வேண்டிய தொகையை தராமல் இழுத்தடிப்பு செய்யும் ஜித்து வேலையெல்லாம் பார்சிலோனாவுக்கு கைவந்த கலை.
தற்போது, பி.எஸ்.ஜி., அணி, நெய்மரை விலைக்கு வாங்கியுள்ளது பார்சிலோனாவுக்கு மிகப் பெரிய அடியாகும். இழப்பீடு கேட்டு வழக்கு எல்லாம், வெறும் பணத்துக்காக இல்லை.
நெய்மர் ஒரு முக்கிய வீரர் என்பதோடு, இது பார்சிலோனாவின் கவுரவப் பிரச்னையாகும். அதனால் தான், இந்த வழக்கு நாடகத்தில் அது இறங்கியுள்ளது.
Story first published: Wednesday, August 23, 2017, 17:06 [IST]
Other articles published on Aug 23, 2017


Click it and Unblock the Notifications