டெல்லி: நைஜீரியாவில் விளையாட்டு வீரர்கள் சென்ற பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியதில் 21 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் உலக விளையாட்டு அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பேருந்தில் 35 பயணிகள் பயணித்துள்ளனர். பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அதில் பயணித்துள்ளனர். தென்மேற்கு ஓகுன் மாநிலத்தில் நடந்த விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு, இவர்கள் அனைவரும் பேருந்தில் வடக்கு கனோ (Kano) மாநிலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, மேம்பாலத்தின் மேலிருந்து பேருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தது. உடனடியாகப் பேருந்தில் இருந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதில் சிலர் மட்டுமே உயிர் தப்பி இருக்கின்றனர்.
நைஜீரியாவில் சாலைகள் மிகவும் மோசமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இது அந்த நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதனால் பல்வேறு விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 9,570 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா ஒரு சிறிய நாடு என்னும் நிலையில், இத்தனை விபத்து சம்பவங்கள் நடைபெற்றிருப்பது அந்த நாட்டின் மோசமான சாலைப் பராமரிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.
தற்போது நடந்துள்ள இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து கீழே விழுந்த போது சாலையில் வேறு எந்த வாகனங்களும் செல்லவில்லை எனவும், ஓட்டுநரின் சோர்வு மற்றும் அதிகப்படியான வேகம் மட்டுமே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து இரவு நேரத்தில் நடந்துள்ளது.
எனவே, அந்த ஓட்டுநர் ஓய்வு எடுக்காமல் வண்டியை ஓட்டியது இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 1000 கிலோமீட்டர் பயணத்தின் போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.