மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் வீரர்களை பார்த்து ஆஸி. வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய தேவையில்லை, ஏனெனில் அந்த அணி வீரர்கள் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்று கேலி செய்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட்டை 48 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்ட்டை 4 விக்கெட் வித்தியாசத்திலும் பறிகொடுத்தது.
2வது டெஸ்ட் போட்டியின்போது ஓய்வு அறையில் ஷிகர்தவான் மற்றும் சக வீரர் விராட் கோஹ்லி இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கோபித்துக் கொண்டதாகவும், அணி இயக்குநர் ரவி சாஸ்திரிதான் சமாதானம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மெல்பர்னில் நாளை 3வது டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மிட் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அணி வீரர்களை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் (வார்த்தை சீண்டல்) செய்ய தேவை கிடையாது. அந்த வீரர்களுடன் அதிகம் பேசக்கூட தேவையில்லை. ஏனெனில் இந்திய அணி வீரர்கள் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொள்வார்கள்.
இந்த வாரமும் அந்த சண்டை தொடரும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் நான்குக்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை வெல்லவே விரும்புகிறோம். வெளி நாட்டு மண்ணிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான் ஆஸ்திரேலியாவுக்கு இப்போதுள்ள ஒரே கவலை. கடந்த ஓராண்டாகவே ஆஸ்திரேலிய மண்ணில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளோம். இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.