சென்னை: 18 வயதேயான இளம் செஸ் வீரர் பிரக்ஞானாந்தா கடந்த 30 நாட்களில் ஒரேயொரு நாள் மட்டுமே ஓய்வெடுத்துள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான செஸ் உலகக்கோப்பை தொடர் ஜூலை 30ஆம் தேதி தொடங்கியது. இதற்காக ஜூலை 27ஆம் தேதியே அஜர்பைஜானுக்கு பயணம் மேற்கொண்டார் பிரக்ஞானந்தா. தரவரிசையில் 31ஆவது இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா தரவரிசையில் நம்பர் 2, நம்பர் 3 இடங்களில் இருந்த ஃபேபியோ கருவானா, ஹிகாரு உள்ளிட்டோரை வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தாலும், விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் உலகக்கோப்பை இறுதியில் ஆடிய இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அதுமட்டுமல்லாமல் டாப் வீரர்கள் மட்டுமே ஆடும் கேண்டிடேட்ஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் தகுதிபெற்ற இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
இந்த உலகக்கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதியே முடிவடைந்தும், உடனடியாக பிரக்ஞானந்தா நாடு திரும்பவில்லை. அங்கிருந்து நேரடியாக ஜெர்மனி புறப்பட்டு சென்ற பிரக்ஞானந்தா, அங்கு நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார். அதிலும் பிரக்ஞானந்தா இடம்பெற்ற WR செஸ் அணியில் சாம்பியன் பட்டம் வென்றது.

நேற்றுடன் ரேபிட் செஸ் தொடர் முடிவடைந்த நிலையில், இன்று தாயகம் திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு திறந்தவெளி வாகனத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நடராஜனுக்கு பின் தமிழ்நாடு மக்களால் அதிகமாக கொண்டாடப்பட்ட வீரராக பிரக்ஞானந்தா மாறி இருக்கிறார்.
உலகக்கோப்பை செஸ் தொடரில் இருந்து தொடர்ந்து ஒரு மாதமாக செஸ் போட்டிகளில் ஓய்வின்றி பங்கேற்று வருவதன் மூலமாக பிரக்ஞானந்தா அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இன்று தமிழ்நாடு வந்த பிரக்ஞானாந்தா, இன்றிரவே கொல்கத்தா பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அடுத்த மாதத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பயிற்சியை தொடங்குவதற்காக பிரக்ஞானந்தா கொல்கத்தா பயணம் மேற்கொள்ளதாக தெரிய வந்துள்ளது. 18 வயதிலேயே ஓய்வில்லாமல் பம்பரமாய் அடுத்தடுத்து செஸ் தொடர்களில் தோல்விகளை பற்றி கவலைப்படாமல் பயணிக்கும் பிரக்ஞானந்தா பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளார்.