அடெலெய்ட்: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் மட்டுமல்லாமல் பிப்ரவரி 14ஆம் தேதிக்கு முன்னதாக நடைபெறும் வார்ம்-அப் (பயிற்சி) ஆட்ட டிக்கெட்டுக்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 8 ஆம் தேதியன்று அடிலெய்டில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா, பிப்ரவரி 9 ஆம் தேதியன்று சிட்னியில் நடைபெறும் பாகிஸ்தான் - பங்களாதேஷ் இடையிலான வார்ம்-அப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் முழுவதுமாக தீர்ந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதுமே பயிற்சி ஆட்டங்களுக்கான நுழைவு இலவசம்தான் எனினும், உள்நுழைய ரசிகர்கள் டிக்கெட்டுகளை விரும்புவதால் இந்த முறை விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த போட்டிகளுக்கு மட்டும் கிட்டதட்ட 7,50,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளனவாம்.
"மக்களின் உலகக் கோப்பை கிரிக்கெட் மோகமானது தற்போது பயிற்சி ஆட்டங்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த வாரத்திலிருந்தே ரசிகர்கள் கூட்டம் குவியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது" என்று ஐசிசி அதனுடைய வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
ஆனாலும், மற்ற பிற வார்ம்-அப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.cricketworldcup.com என்ற இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 14 வார்ம்-அப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.