நார்வே : நார்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் வகை ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை முதல்முறையாக வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
மே27ஆம் தேதி முதல் நார்வே செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து தமிழக வீரர் பிரக்ஞானந்தா களமிறங்கினார். ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பிரக்ஞானந்தாவை கார்ல்சனை வீழ்த்தி இருந்ததால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இதுவரை கார்ல்சனை ரேபிட் வகையிலான செஸ் போட்டியில் மட்டுமே பிரக்ஞானந்தா வீழ்த்தி இருக்கிறார். கிளாசிக்கல் வகை செஸ் ஆட்டம் என்பது ஒரு காயினை நகர்த்துவதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இதனால் பிரக்ஞானந்தா மீது அதிகளவிலான அழுத்தம் இருந்தது.
ஆனால் வெள்ளை காயின்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலமாக நார்வே செஸ் தொடரின் புள்ளிப்பட்டியலில் 5.5 என்ற புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மறுமுனையில் தோல்வியடைந்த கார்ல்சன் வெறும் 3 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதில் 5 புள்ளிகளுடன் ஃபேபியோ கருவானா 2வது இடத்தில் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் அசத்தலாக விளையாடி வருகிறார். மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல்முறையாக வீழ்த்தி அசத்தினார் வைஷாலி. இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் 2வது இடத்தில் 4.5 புள்ளிகளுடன் வென்ஜுன் 2வது இடத்தில் இருக்கிறார். நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் தங்க மகனும், தங்க மகளும் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.