மிலன் கார்டினா: இத்தாலியில் நடைபெற்று வரும் மிலன் கார்டினா குளிர்கால ஒலிம்பிக் தொடரில் நார்வே நாடு தனது 17-வது தங்கப் பதக்கத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் ஒரே குளிர்கால ஒலிம்பிக் தொடரில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நாடு என்ற தனது சொந்த சாதனையை நார்வே முறியடித்துள்ளது. முன்னதாக, 2022-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் நார்வே 16 தங்கப் பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த மைல்கல்லை அவர்கள் தாண்டியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 15 கிலோமீட்டர் மாஸ் ஸ்டார்ட் பயத்லான் போட்டியில் நார்வே வீரர் ஜோஹன்னஸ் டேல்-ஸ்க்ஜெவ்டால் தங்கம் வென்றார். பனிச்சறுக்கு மற்றும் துப்பாக்கி சுடுதல் இரண்டும் கலந்த இந்தப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட 20 இலக்குகளையும் பிழையின்றிச் சுட்ட ஒரே வீரர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் பந்தய தூரத்தை 39 நிமிடங்கள் மற்றும் 17.1 விநாடிகளில் கடந்து அவர் முதலிடம் பிடித்தார். வெற்றி குறித்துப் பேசிய ஜோஹன்னஸ், "எனது முதல் ஒலிம்பிக்கில் இது ஒரு சிறப்பான முடிவாக அமைந்துள்ளது. 20 இலக்குகளையும் நான் சரியாகச் சுட்டது இதுவே முதல் முறை. மைதானத்தில் இலக்கை நோக்கித் தனியாகச் சுடுவது ஒரு கனவு போன்ற தருணம். இதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதே போட்டியில் நார்வேயின் மற்றொரு வீரரான ஸ்டுர்லா ஹோம் லெக்ரேட் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் துப்பாக்கி சுடுதலில் ஒரே ஒரு இலக்கை மட்டுமே தவறவிட்டார். ஜோஹன்னஸை விட 10.5 விநாடிகள் மட்டுமே அவர் பின்தங்கியிருந்தார். இந்தப் போட்டி நாளன்று தனது 29-வது பிறந்தநாளைக் கொண்டாடிய லெக்ரேட்டிற்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. நடப்பு ஒலிம்பிக்கில் இது அவருக்கு 5-வது பதக்கமாகும். இதில் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
பிரான்ஸ் நாட்டின் குவென்டின் ஃபிலோன் மெய்லெட் இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். பந்தயத்தின் ஒரு கட்டத்தில் ஜெர்மனியின் பிலிப் ஹார்ன் மூன்றாம் இடத்தில் இருந்தார். ஆனால், பனிச்சறுக்கில் வேகமெடுத்த மெய்லெட், ஹார்னைப் பின்னுக்குத் தள்ளி வெண்கலத்தைத் தட்டிச் சென்றார். மெய்லெட் தனது வாழ்நாளில் வெல்லும் 9-வது ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும்.
நான்காவது இடம் பிடித்ததால் ஏமாற்றமடைந்த ஜெர்மனி வீரர் ஹார்ன், "நான் துப்பாக்கி சுடுதலில் சிறப்பாகச் செயல்பட்டேன். ஆனால் கடைசி சுற்றில் என்னால் வேகமாகச் செயல்பட முடியவில்லை. ஒலிம்பிக்கில் 4-வது இடம் பிடிப்பது எந்த வகையிலும் பலனளிக்காது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
பயத்லான் பிரிவில் அமெரிக்காவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட காம்ப்பெல் ரைட், 7 இலக்குகளைத் தவறவிட்டு கடைசி இடத்தைப் பிடித்தார். அதேபோல், உலகக்கோப்பை தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள இத்தாலி வீரர் டோமாஸோ ஜியாகோமெல் பந்தயத்தின் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். ஆனால், திடீரென விலாப்பகுதியில் ஏற்பட்ட வலி மற்றும் மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார்.
பயத்லான் மாஸ் ஸ்டார்ட் போட்டிகளில் உலகக் கோப்பை தரவரிசை மற்றும் ஒலிம்பிக் செயல்பாடுகளின் அடிப்படையில் சிறந்த 30 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் 3 கிலோமீட்டர் தூரத்தை 5 சுற்றுகளாகக் கடக்க வேண்டும். படுத்தபடி இரண்டு முறையும், நின்றபடி இரண்டு முறையும் இலக்குகளைச் சுட வேண்டும்.
ஆண்களுக்கான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பெண்களுக்கான 12.5 கிலோமீட்டர் போட்டி சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது. இதுவே இந்த ஒலிம்பிக்கின் பயத்லான் பிரிவின் கடைசிப் போட்டியாகும்.