புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை டுட்டீ சந்த் ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று சாதனை புரிந்ததை அடுத்து, ஒடிசா முதல்வர் டுட்டீ சந்த்துக்கு 1.5 கோடி பரிசு அறிவித்துள்ளார்.
நேற்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடந்த மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். போட்டி தூரத்தை 11.32 வினாடிகளில் கடந்தார். முதல் இடத்தை 0.02 வினாடிகளில் தவறவிட்டார்.

மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையும் இவர் வசம் தான் உள்ளது. மேலும், இது தான் முதல்முறையாக அவர் பங்கேற்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்கள் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சுமார் இருபது ஆண்டுகளுக்கு பின் ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்வதை அடுத்து ஒடிசா அரசு 1.5 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. இதற்கு முன் 1998இல் தான் ஒடிசாவை சேர்ந்த தடகள வீரர் ரச்சிதா பண்டா மிஸ்திரி ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்று இருந்தார்.
ஒடிசா மாநிலத்தில் தடகளத்திற்கு முக்கியத்துவம் அளித்து விரைவில் தடகள பயிற்சி மையம் ஒன்றை பெரியளவில் திறக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.