பாரிஸ் : 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். 22 வயது ஆன மனு பாக்கர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
தனது 16 வது வயதில் இருந்தே சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் ஜொலித்து வந்த மனு பாக்கர் இதுவரை உலக கோப்பையில் ஒன்பது தங்கப்பதக்கங்களையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

இதேபோன்று இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கர் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு தங்கம், ஒரு வெண்கலம் வென்றிருக்கிறார். இதை போன்று காமன்வெல்த் போட்டிகளில் ஒரு தங்கம் என மனுபாக்கர் மொத்தமாக 15 தங்கம், மூன்று வெள்ளி ஒரு வெண்கலம் பதக்கங்களை வென்றிருக்கிறார்.
இதற்கெல்லாம் முத்தாக தற்போது ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். ஹரியானாவை சேர்ந்த மனு பாக்கர் முதலில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் தான் ஆர்வம் செலுத்தி இருக்கிறார்.அதன் பிறகு துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனுபாக்கருக்கு ஆர்வம் கிடைத்திருக்கிறது. முதலில் தேசிய அளவில் சாதனை படைத்த மனு பாக்கர் பிறகு ஜூனியர் அளவில் தனக்கென ஒரு பெயரை பெற்றார்.
இப்படி சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை மனு பாக்கர் பெற்று வந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மிகப்பெரிய சரிவை சந்தித்தார். அதற்கு இயற்கை ஒரு பெரிய காரணமாக அமைந்தது. தன்னுடைய துப்பாக்கி சரியாக இயங்கவில்லை என மனு பார்க்கர் புகார் அளித்தார். ஆனால் வேறு துப்பாக்கி மாற்ற நடுவர்கள் அனுமதிக்கவில்லை.
இதன் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு மனு பாக்கருக்கு பறிபோனது. இதனால் மன உளைச்சலில் இருந்த மனு பாக்கர் திடீரென்று இந்த துப்பாக்கி சுடுதல் விளையாட்டே எனக்கு வேண்டாம் என உதவி விட்டு சென்று விட்டார். தன்னுடைய சிறு வயது பயிற்சியாளர் ஆன ஜஸ்பல் ராணாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டோக்கியோ ஒலிம்பிக் முன்பு இருவரும் விலகிச் சென்றனர்.
அதன்பிறகு மனு பாக்கருக்கு சரிவு காலமாக அமைந்தது. இதனால் இந்த போட்டியே வேண்டாம் என்று சென்ற மனு பாக்கரை மீண்டும் பயிற்சியாளர் ரானாவே அழைத்து மீண்டும் உறுதுணையாக இருந்திருக்கிறார். இதனை அடுத்து கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி செய்து வந்த மனு பாக்கர் தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இருக்கிறார். எவ்வளவுதான் நமக்கு மன வலி ஏற்பட்டாலும், கடைசி வரை களத்தில் நின்று சரியான வழிகாட்டுதலில் போராடினால் நிச்சயம் நாம் சாதிக்கலாம் என்பதுதான் மனு பாக்கரின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்கும் பாடமாகும்.