டெல்லி: 33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இம்முறை ஒலிம்பிக் தொடரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக பாரிஸ் நகரம் முழுக்க தயார் நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் முதல்முறையாக 100க்கும் அதிகமான பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். அதனால் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளிலும் புதிய வரலாற்றை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பதற்றம், கவலை, பயம் உள்ளிட்டவற்றால் தூக்கத்தை இழந்து தவிப்பார்கள்.

பாரிஸில் நடப்பதால் இந்திய நேரப்படி தூங்கி பழகிய பலரும், அந்நாட்டு நேரப்படி தூங்க முடியாமல் சிக்கலை சந்திப்பார்கள். இதற்காக சில இந்திய வீரர்கள் இப்போதே பாரிஸ் நகரம் சென்றடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய வீரர்கள் சரியான தூக்கத்தை பெறுவதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக ஆரோக்கியமான தூக்கத்தை பெறுவதற்காக மருத்துவ நிபுணர் ஒருவரையும் அனுப்பவுள்ளது.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் ஸ்லீப்பிங் கிளினிக் ஒன்றை நடத்தி வருபவர் மோனிகா சர்மா. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே மருத்துவ மோனிகா சர்மா இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதேபோல் சில இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆலோசனைகளையும் அளித்து வருகிறார். இந்திய வீரர்களுடன் பயணிப்பது குறித்து மோனிகா சர்மா பேசுகையில், ஹரியானாவில் ஆரோக்கியமான தூக்கத்திற்கான கிளினிக் மூலம் பணியை தொடங்கினேன்.
விளையாட்டு வீரர்களுடன் பணியாற்றிய பின் அதன் தாக்கத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தினர் புரிந்து கொண்டனர். இதேபோல் பாரிஸ் ஒலிம்பிக்கின் போது வீரர்களுடன் பயணித்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய வீரர்களை பொறுத்தவரை தூங்குவதற்கு தாமதமாகுவதும், தூக்கத்தின் போது திடீரென முழிப்பு வருவதும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.
தூங்குவதற்காக எந்த திட்டமும் இல்லாமல் தூங்குவோர் பிரச்சனைகளை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய வீரர்கள் சரியான தூக்கத்தை பெறுவதற்காக இம்முறை கண்களில் அணியும் மாஸ்க், கழுத்திற்கான தலையணை, ஸ்லீப் பாட்ஸ் உள்ளிட்டவையும் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் தூக்க நிபுணர் மோனிகா சர்மாவும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருவது தெரிய வந்துள்ளது.