அகமதாபாத்: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் குஜராத் வீரர்களுக்கு ரூ. 5 கோடி பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சுமார் 300 மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் நேற்று தனது வீட்டில் ரக்ஷா பந்தன் விழாவினைக் கொண்டாடினார் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேல். அப்போது பேசிய ஆனந்தி பென் பட்டேல், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வெல்லும் வீரர்- வீராங்கனைகளுக்கு மாநில அரசு வழங்கவுள்ள ரொக்கப் பரிசுகளை அறிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு தலா 5 கோடி ரூபாயும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு தலா 3 கோடி ரூபாயும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு தலா 2 கோடி ரூபாயும் மாநில அரசின் சார்பில் வழங்கப்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றால் 2 கோடியும், வெள்ளிக்கு 1 கோடி ரூபாயும், வெண்கலத்துக்கு 50 லட்சம் ரூபாயும் மாநில அரசின் சார்பில் பரிசாக அளிக்கப்படும்.
இதேபோல், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வெல்லும் குஜராத் மாநில வீரர்- வீராங்கனைகளுக்கு முறையே ரூ.1 கோடி, ரூ.50 லட்சம் மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.