டோக்கியோவில் புதிய ரெக்கார்டு.. பதக்கத்தில் அல்ல.. கொரோனாவில்.. ஒலிம்பிக் தொடர்வதில் சிக்கல்?
ஜப்பான்: டோக்கியோ நகரம் இப்போது கொரோனாவால் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுக்கு என்னவா?? அங்க தாங்க ஒலிம்பிக் தொடரே நடந்துக்கிட்டு இருக்கு.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் பதக்கங்களை குவித்து வரும் நிலையில், இந்தியா சார்பில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா இடம்பெற காரணமானார்.

ஒரே நாளில்
இந்நிலையில், தற்போது ஒலிம்பிக் போட்டிகள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு நாடுகளும் பதக்கங்களை வெல்ல மிகத்தீவிரமாக உழைப்பை போட்டு வரும் நிலையில், 'நான் மட்டும் என்ன சும்மாவா!' என்று கொரோனாவும் பதக்கங்களுடன் போட்டிப் போட்டு வருகிறது. ஆம்! இன்று ஒரே நாளில் டோக்கியோ நகரில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

முழுமையாக நடைபெறுமா?
அதாவது, டோக்கியோ நகரில் இன்று (ஜுலை.28) ஒரே நாளில் 3,177 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மருத்துவமனைகளில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எகிறும் கொரோனா தொற்று காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அச்சம்
ஏற்கனவே, நடைபெற்று வரும் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், மேலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,. மீதமுள்ள போட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களை அச்சப்படுத்தியுள்ளது.

கேள்விக்குறி
எனினும், வீரர்களின் கவனம் சிதறிவிடக் கூடாது, இந்த தகவல் அவர்கள் வசம் சென்றுவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு நாடுகளின் நிர்வாகமும் தெளிவாக உள்ளன. ஒருவேளை வீரர்களுக்கோ, நிர்வாகிகளுக்கோ அல்லது ஒலிம்பிக் பணியாளர்களுக்கோ கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில், ஒலிம்பிக் தொடர்ந்து நடப்பது கேள்விக்குறியாகிவிடும்.


Click it and Unblock the Notifications