சென்னை : பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று இந்தியாவின் மனு பாக்கர் சாதனை படைத்தார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமை மனு பாக்கருக்கு கிடைத்தது.
இந்த நிலையில் மனு பாக்கர் சாதனையை பாராட்டி அவர் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய கொடியை ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஸ் உடன் இணைந்து ஏந்தி வரும் கௌரவம் கிடைத்தது. தற்போது மனு பாக்கர் தாயகம் திரும்பிய நிலையில் அவர் மூன்று மாதம் ஓய்வு எடுக்கப் போவதாக அவருடைய பயிற்சியாளர் ராணா தெரிவித்திருந்தார்.

இந்த மூன்று மாத ஓய்வின்போது இளம் வீரர் வீராங்கனைகளுடன் தனது நேரத்தை செலவிட்டு தாம் எவ்வாறு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகினேன். தமது அனுபவம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து இளம் வீரர்களுடன் கலந்துரையாட போவதாக மனு பாக்கர் கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி சார்பாக நடத்தப்பட்ட இந்த விழாவில் மனு பாக்கர் பங்கேற்றார். அப்போது 2032 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் இளம் மாணவ மாணவியருக்கு விளையாட்டு பயிற்சிகள் பள்ளியின் சார்பாக தரப்படுகிறது. இதற்காக ஊக்கத்தொகை 2 கோடி ரூபாய் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மனு பாக்கருக்கு ஏர் பிஸ்டல் பரிசாக வழங்கப்பட்டது. இதன்பிறகு மாணவர்களுடன் கலந்துரையாடிய போது தமிழகத்தில் உள்ள பிரபலங்களை தெரியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலினை தெரியுமா என கேட்டதற்கு அவர் தெரியாது என்று பதிலளித்தார்.
அதன் பிறகு செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை தெரியுமா என்று கேட்டதற்கு ஆம் தெரியும் என்று கூறினார். மூன்றாவதாக நடிகர் விஜய்யை தெரியுமா என்று கேட்கப்பட்டதற்கு ஆம் தெரியும் அவருடைய ரசிகை நான் என்று மனு பாக்கர் பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து மாணவிகளுடன் பிகில் படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு மேடையில் நடனம் ஆடி அசத்தினார்.