பாரிஸ் : ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வாங்கிய இரு வீரர்களுமே பந்தய தூரத்தை 9.79 வினாடிகளில் கடந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ஒரே நொடிகளில் கடந்த இரண்டு பேரில் ஏன் ஒருவருக்கு மட்டும் தங்கம் மற்றொருவருக்கு வெள்ளி கிடைத்தது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். அதை தான் தற்போது பார்க்க இருக்கின்றோம்.

முதலில் அதைப் பற்றி பார்ப்பதற்கு முன் ஓட்டப் பந்தயத்தில் வெற்றியாளர்கள் எப்படி தீர்மானிக்கப்படுகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். 100 மீட்டர், 200மீ என அனைத்து ஓட்டப்பந்தயத்திலும் எல்லை கோட்டை கடக்கும் போது முதலில் வீரர்களின் கால் அல்லது தலை அல்லது கை என எது பட்டாலும் அவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.
அது தவறு நேற்றைய போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த அமெரிக்க வீரர் கெர்லியின் கால் தான் எல்லைக்கோட்டை தாண்டி முதலில் பட்டிருக்கும். அப்படி பார்த்தால் அவர் தானே வெற்றியாளர் என்று நீங்கள் கூறலாம். இதே போன்று இன்னொரு வீடியோவில் ஜமைக்கா வீரர் தாம்சன் தானே முதலில் வந்தார் என்று நீங்கள் கூறலாம். ஆனால் விதிப்படி வீரரின் நெஞ்சு எல்லைக்கோட்டை கடந்து இருக்க வேண்டும்.
அதை வைத்து தான் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். இந்த விதியை மனதில் வைத்துக் கொண்டு தற்போது நீங்கள் வெற்றியாளர்களின் புகைப்படத்தை பார்த்தால், தங்கம் வென்ற நோவா லைல்ஸின் நெஞ்சு பகுதி தான் முன்னே வந்திருக்கும்.தாம்சனின் நெஞ்சு கொஞ்சம் பின்னால் இருந்திருக்கும்.
மூன்றாவது இடம் பிடித்தவரின் நெஞ்சு கொஞ்சம் தள்ளி இருந்திருக்கும். இந்த ஒரு வித்தியாசம் தான் தங்கத்திற்கும் வெள்ளிக்கும் உள்ள வித்தியாசமாகும். இதை வினாடி கணக்கில் பிரித்துப் பார்த்தால் ஆயிரத்தில் 5 வினாடிகள் வித்தியாசம் என்ற ஒரு பங்கு தான் இன்று வெற்றியாளர்களை தீர்மானித்திருக்கிறது. அதன்படி அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் 9.794 வினாடிகளிலும் தாம்சன் 9.799 வினாடிகளிலும் கடந்திருக்கிறார்கள்.
இதனால் தான் நோவா லைல்ஸ் தங்க பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இப்படி யார் வெற்றி பெற்றார்கள் என்பதை அறிய முடியவில்லை என்றால் இதனை ஆங்கிலத்தில் போட்டோ பினிஷ் என்று சொல்வார்கள். வீரர்களின் 360 டிகிரி கோணத்தில் புகைப்படங்களை வைத்து யார் நெஞ்சு எல்லைக்கோட்டை தொட்டிருக்கிறது என்பதை பார்ப்பார்கள். நேற்று அப்படித்தான் நோவா லைல்ஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
எனவே உங்கள் வீட்டு குழந்தைகள் ஓட்டப்பந்தய வீரராக வரவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் எல்லைக்கோடு வரும்போது நெஞ்சு முன்பக்கம் சாய்ந்திருக்கும் வகையில் ஓட கற்றுக் கொடுங்கள். இந்த விதி ஏன் இருக்கிறது என்றால், 100 மீட்டர் தூரத்தை முதலாவதாக கடக்க திடீரென்று வீரர்கள் பாய்ந்து விடக்கூடாது, இல்லை காலை மட்டும் வைத்து நான் தான் வெற்றி பெற்றேன் என்று கூறக்கூடாது என்பதற்காகத்தான் நெஞ்சை வைத்து வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகிறார்கள்.