டோக்கியோ: ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டியில் இன்று நடந்த 6வது ரேஸில் இந்தியாவில் கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் 7வது இடத்தை பிடித்தனர். நேற்று 19வது இடத்தில் இருந்த நிலையில் இன்று 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளனர்.
ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியா சார்பாக நான்கு பேர் விளையாட தேர்வாகி உள்ளனர். நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், கேசி கணபதி ஆகிய மூன்று தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் மற்றும் வருண் தாக்கர் என்ற இன்னொரு வீரர் இதில் ஆடி வருகிறார்கள்.
இதில் ஒரு பக்கம் தனிப்போட்டிகள் நடந்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக இரட்டையர் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இது 49இ ஆர் பிரிவாகும். இதில் இரண்டு கைகளில் பாய்மரத்தை இயக்க முடியும். இதில் இந்தியா சார்பாக கேசி கணபதி மற்றும் வருண் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தினமும் 2 ரேஸ்கள் வீதம் 6 நாட்களுக்கு 12 ரேஸ்கள் நடக்கும். இதுவரை நடந்த ரேஸ்களின் விவரம் பின்வருமாறு ,
ரேஸ் 1: 18வது இடம்
ரேஸ் 2: 18வது இடம்
ரேஸ் 3: 17வது இடம்
ரேஸ் 4: 19வது இடம்
இந்த நிலையில் இன்று 5 மற்றும் 6வது ரேஸ் நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் இருந்தே வருண், கணபதி ஜோடி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இன்று இவர்கள் 16வது இடத்தை பிடித்தனர். அதன்பின் 6வது ரேஸில் மேலும் முன்னேற்றம் அடைந்து 7வது இடத்தை பிடித்தனர்.
ரேஸ் 5: 16வது இடம்
ரேஸ் 6: 7வது இடம்
இதனால் நாளை நடக்கும் ரேஸ்களில் இவர்கள் 5 இடங்களுக்குள் வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.2018 ஆசியன் விளையாட்டு போட்டியில் கேசி கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்த ஒலிம்பிக்கில் இவர்கள் ஜோடியாக ஆடுகிறார்கள்.