சென்னை: இந்தியாவை பொறுத்தவரை விளையாட்டு கலாச்சாரம் என்பது கிரிக்கெட்டோடு ஓய்ந்துவிடும். இந்திய மண்ணில் உருவான மிகச்சிறந்த விளையாட்டு வீரராக சச்சின் டெண்டுல்கர் தான் இருந்து வருகிறார். ஆனால் கடந்த ஒலிம்பிக் தொடருக்கு பின் சச்சின் டெண்டுல்கருக்கு பின் ஒரு பெயர் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது.
ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இதுவரை இந்தியா சார்பாக கலந்து கொண்ட வீரர்களில் ஒருவர் கூட தங்கப்பதக்கம் வென்றதில்லை என்று வரலாற்றை மாற்றியவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் வீசிய நீரஜ் சோப்ரா, இந்தியாவின் 121 ஆண்டு கால கனவை நிறைவேற்றியுள்ளார். அதன்பின் 13 ஆண்டுகளுக்கு பின் இந்திய தேசிய கீதம் ஒலிம்பிக் அரங்கில் ஒலித்தது.

2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன் 2018ஆம் ஆண்டு நடந்த ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று கவனம் ஈர்த்திருந்தார் நீரஜ் சோப்ரா. அதன்பின் இந்திய விளையாட்டு வீரர்கள் அளவில் கவனம் பெற்றாலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலமாக உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.
2008ஆம் ஆண்டு துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ராவுக்கு பின் தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனிநபர் விளையாட்டில் இதுவரை இந்தியா 2 தங்கப்பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இம்முறை அதன் எண்ணிக்கையை 3ஆக அதிகரிக்க நீரஜ் சோப்ரா தயாராகி வருகிறார்.
ஒலிம்பிக் தொடருக்காக நீரஜ் சோப்ரா ஐரோப்பாவில் உள்ள சாய் என்எஸ்என்ஐஎஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார். இதற்காக இந்திய விளையாட்டுத் துறை தரப்பில் ரூ.5.72 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தொடருக்கு தயாராவதற்காக தோஹாவில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் கூட நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை.
அதேபோல் இம்முறை ஈட்டி எறிதலில் 90 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஈட்டியை எறிந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஏற்கனவே சில தொடர்களில் 90 மீட்டர் என்ற இலக்கை எட்டியிருந்தாலும், ஒலிம்பிக் போன்ற அழுத்தம் நிறைந்த தொடர்களில் 90 மீட்டர் தூரம் என்பது எளிதான விஷயமல்ல. இதற்காக நீரஜ் சோப்ரா உடல் மற்றும் மனதளவிலும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.