பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்த தடகள போட்டி பிரிவுகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஓட்டப்பந்தயத்தில் மிகவும் உயரிய பந்தயமாக ஒலிம்பிக் தொடர் கருதப்படும்.
இதில் வெற்றி பெறுபவர்கள் வாழ்க்கை உச்சமடையும். ஒரே இரவில் சூப்பர் ஸ்டார் ஆக உருவெடுக்க முடியும். உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியை விட மிகவும் பெருமை வாய்ந்த தொடராக ஒலிம்பிக் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்கா கடந்த 28 ஆண்டுகளாக தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷிக்காரியா ரிச்சர்ட்சன் என்ற வீராங்கனை இந்த தங்கப்பதக்கத்திற்கான கனவை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஷிக்காரிய ரிச்சர்ட்சன் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இதனால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இதேபோன்று ஷிக்காரியா ரிச்சர்ட்சன் கடும் சவால்களை அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜமைக்கா வீராங்கனை பிரேசர் காயத்திற்கு சிகிச்சை பெற்ற பின் பின் தாமதமாக மைதானத்திற்கு வந்ததாக கூறி இறுதிப்போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போட்டி தொடங்கப்பட்டது. இதில் ஷிக்காரியா ரிச்சர்ட்சன் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவர் பின்னடைவை சந்தித்தார். யாருமே எதிர்பாராத வகையில் செயின்ட் லூசியா தீவை சேர்ந்த ஜூலியன் அல்ஃபர்ட் என்ற வீராங்கனை 10 புள்ளி 72 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து தங்க பதக்கத்தை தட்டி சென்றார்.
செயிண்ட் லூசியா வெல்லும் முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும். இதேபோன்று தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க வீராங்கனை ஷிக்காரியா ரிச்சர்ட்சன் 10.87 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஆன மெலிசா ஜெபர்ஸன் 10 புள்ளி 92 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
நான்காவது இடத்தை 10.96 வினாடிகளில் கடந்து பிரிட்டன் வீராங்கனை டேரில் நீதா பிடித்தார். 12 வயதில் தனது தந்தையை இழந்த நிலையில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஜூலியன் அல்பர்ட் தன்னுடைய பயிற்சியாளரின் அறிவுறுத்தலால் மீண்டும் பந்தயத்திற்கு திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.