பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடரின் போட்டிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இன்னும் சில மணி நேரங்களில் செய்ன் நதியில் பிரம்மாண்டமாக தொடக்க விழா நடக்கவுள்ளது. முதல்முறையாக மைதானத்தில் இருந்து வெளியில் தொடக்க விழா நடப்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். அதேபோல் பாரிஸ் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்முறை வீரர்களின் பேரணி படகுகளில் நடக்கவுள்ளது. மொத்தமாக 500க்கும் அதிகமான படகுகளில் வீரர்கள் தேசியக் கொடியை ஏந்தி வரவுள்ளனர். இந்தியா சார்பாக பிவி சிந்து மற்றும் தமிழக வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்தி பேரணியை வழிநடத்தவுள்ளனர்.

இம்முறை இந்தியா சார்பாக 117 வீரர்கள் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள தகுதிபெற்றுள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 13 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஸ்வின் ஆல்ட்ரின், ஆடவர் மும்முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்ப்) விளையாட்டில் பிரவீன் சித்திரவேல், ஆடவர் 4x400 தொடர் ஓட்டப் பந்தியத்தில் ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் தமிழரசன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல் மகளிர் 4x400 தொடர் ஓட்டப்பந்தயத்தில் சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். மகளிருக்கான பாய்மர படகுப்போட்டியில் நேத்ரா குமணன், ஆடவருக்கான பாய்மர படகுப்போட்டியில் விஷ்ணு சரவணன், துப்பாக்கிச் சுடுதலில் நட்சத்திர வீராங்கனை இளவேனில் வாளரிவன், பிரித்விராஜ் தொண்டைமான் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல் டேபிள் டென்னிஸ் பிரிவில் சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் ஆகியோரும், டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் பாலாஜியும் தகுதி பெற்றுள்ளனர். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பதக்கத்துடன் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் துப்பாக்கிச் சுடுதலில் இளவேனில் மற்றும் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ஸ்ரீராம் பாலாஜியும் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.