பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துருக்கி நாட்டைச் சேர்ந்த 51 வயதான யூசுப் என்ற வீரர் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறார். பொதுவாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் வீரர்கள் பலரும் விலை உயர்ந்த உபகரணங்களை பயன்படுத்தி போட்டியில் பங்கேற்பார்கள்.
விலை உயர்ந்த ஜாக்கெட்கள் துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தால் காதில் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காகவும், மற்ற வீரர்கள் சுடும் சத்தம் நமது குறிக்கோளை பாதித்து விடக்கூடாது என்பதற்காகவும் நாய்ஸ் கேன்சல் ஹெட்போனை அணிந்திருப்பார்கள்.

இது அனைத்திற்கும் மேல் துல்லியமாக குறி பார்த்து சுடுவதற்காக விலை உயர்ந்த லென்ஸ்கள் அணிந்து வீரர்கள் துப்பாக்கி சுடுவார்கள். இதன் மூலம் பார்வை குன்றி இருந்தாலும் பவர்ஃபுல் லென்ஸ் மூலம் நாம் இலக்கை எளிதாக பார்த்து சுட முடியும். இதனால் பணக்காரர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் அதிக அளவு பங்கேற்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் துருக்கியை சேர்ந்த 51 வயது வீரர் யூசுப் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இருக்கிறார். இவர் எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் வெறும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்து கொண்டு கையை பேண்ட் பாக்கெட்டில் ஸ்டைலாக வைத்துக் கொண்டு வேட்டையாடு விளையாடு படத்தில் வர கமல்ஹாசன் மாதிரி கெத்தாக இலக்கை நோக்கி சுட்டுக் கொண்டிருக்கிறார்.
இவரைப் பார்த்தவுடன் இன்டர்நெட் சமூகம் அசந்து போய்விட்டது. இவரைப் பார்த்தால் வீரர் மாதிரியே தெரியவில்லை. ஹாலிவுட் படத்தில் வரும் ஸ்னைப்பர் ஹீரோக்கள் போல் அசால்ட்டாக வெறும் டீ சர்ட் மட்டும் அணிந்து வந்திருப்பதாகவும் பலரும் பாராட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் யூசுப் துருக்கி ராணுவத்தில் பணிபுரிந்து இருப்பதாகவும், தற்போது ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்று வெள்ளி பதக்கம் கைப்பற்றி இருப்பதாகவும் தெரிகிறது. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியையும் உபகரணமாக பயன்படுத்தி யூசுப் வெள்ளி பதக்கம் வென்று இருப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது.