பாரிஸ்: ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இதன் மூலமாக பதக்கத்தை உறுதி செய்த வினேஷ் போகத், அமெரிக்க வீராங்கனை சாராவை எதிர்கொண்டு தங்கத்தை வெல்ல தீவிரமாக இருந்தார். இதனால் ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்படும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
இந்த நிலையில் திடீரென வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது. 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டுள்ள வினேஷ் போகத்தின் எடை, 100 கிராம் அதிகமாக இருந்தது உடல் எடை சோதனையில் தெரிய வந்தது. இதனால் ஒலிம்பிக் நிர்வாகிகள் தகுதி நீக்கம் செய்து அறிவித்தனர்.

இதன் காரணமாக இந்திய மக்களின் தங்கப் பதக்க கனவு தகர்ந்துள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வினேஷ் போகத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், வினேஷ் போகத் பதக்கமின்றி நாடு திரும்பவுள்ளார்.
இந்த நிலையில் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் வினேஷ் போகத்திற்கு பதிலாக கியூபா வீராங்கனை கூஸ்மன் லோபஸ் பங்கேற்கவுள்ளது தெரிய வந்துள்ளது. இவர் அரையிறுதி சுற்றில் வினேஷ் போகத்திடம் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் முடிவு செய்யப்படவுள்ளது. அதேபோல் வெண்கலப் பதக்கம் ஜப்பான் வீராங்கனை சுசாகி மற்றும் உக்ரைன் வீராங்கனை ஓக்சானா லிவச் ஆகியோருக்கு இடையிலான ஆட்டம் மூலம் முடிவு செய்யப்படவுள்ளது.