Lakshya sen : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் பிரிவில் அரை இறுதி வரை வந்த இந்திய வீரர் லக்சயா சென் வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். எனினும் ஒலிம்பிக் வரலாற்றில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரை இறுதி வரை வந்த முதல் இந்தியர் என்ற சாதனையை 22 வயதிலேயே லக்சயா சென் படைத்திருக்கிறார்.
இந்தத் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி வந்த லக்சயா சென் கடைசி இரண்டு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியும், தடுமாறியும் தான் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் அக்செல்சனுக்கு லக்சயா சென் தண்ணி காட்டினார்.

எனினும் தனது அனுபவ ஆட்டத்தால் டென்மார்க் வீரர் விக்டர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் இன்று பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் லக்சயா சென் தோல்வியை தழுவி இருக்கிறார். இதனால் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு இம்முறை பதக்கம் கிடைக்காமல் போய்விட்டது.
எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டென்மார்க் வீரர் விக்டர், லக்சயா சென் மிகவும் பிரமாதமாக விளையாடி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் கூட என்னை விட அவர்தான் பிரமாதமாக விளையாடினார். இந்த ஒலிம்பிக் போட்டியின் மூலம் அவர் எவ்வளவு பலமான போட்டியாளர் என்பதை அனைவருக்கும் காட்டிவிட்டார். கண்டிப்பாக அடுத்த நான்கு ஆண்டுகளில் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் வரும்போது லக்சயா சென் நிச்சயமாக தங்கப் பதக்கம் வெல்லக்கூடிய வீரராக திகழ்வார்.
லக்சயா சென்னிடம் எல்லையற்ற திறமை இருக்கின்றது. அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட என்னுடைய வாழ்த்துக்கள். மிகப்பெரிய ஆட்டத்தில் கூட அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார். எனினும் முக்கியமான கட்டங்களில் நான் பதற்றம் இல்லாமல் விளையாடி வெற்றி பெறுகின்றேன். என்னை இந்த அளவுக்கு உழைக்க வைத்த லக்சயா சென்னுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் லக்சயா சென்-ஐ வீழ்த்தியதற்கு அனுபவம் மட்டுமே ஒரு காரணமாக இருந்தது. அரையிறுதியில் பெரும்பாலான நேரத்தில் அவர்தான் அருமையாக விளையாடினார். இதனால் அவர் இந்த ஆட்டத்தில் வெற்றி கூட பெற்று இருக்கலாம். போட்டியில் நாம் செய்யும் தவறுகளை குறித்து யோசிக்க கூடாது.
அவ்வாறு செய்தால் நிச்சயம் நமக்கு பிரச்சனை ஏற்படும். லக்சயா சென் இந்த தவறை தான் செய்தார் என்று நினைக்கின்றேன். மன ரீதியாக அவர் இந்த பழக்கத்தை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். பதற்றமான சூழலில் எதிரணி வீரரை நாம் தவறு செய்ய வைக்க வேண்டும். அதை தான் நான் லக்சயா சென்னுக்கு செய்தேன் என்று அவர் கூறினார்.