பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக ஒட்டுமொத்தமாக 117 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.இதில் அதிகபட்சமாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து 48 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 14 வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த பர்கத் சிங் என்ற பஞ்சாப் மாநில சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டனுமான பர்கத் சிங் கடும் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார்.

அதில் நடப்பு ஒலிம்பிக் தொடருக்கு அதிக வீரர்கள் வீராங்கனைகள் சென்ற மாநிலங்களுக்கு குறைவான நிதியே மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாகவும் ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து குறைவான போட்டியாளர்கள் சென்றாலும் அவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து 48 வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களுக்காக மத்திய அரசு பஞ்சாப்புக்கு 78 கோடியும், ஹரியானாவுக்கு 66 கோடியும் ஒதுக்கி இருக்கிறது.
ஆனால் உத்தர பிரதேசம் மற்றும் குஜராத்தில் இருந்து மொத்தமாகவே 9 விளையாட்டு வீரர்கள் தான் பாரிஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றிருக்கிறார்கள்.ஆனால் உத்தரப்பிரதேசத்துக்கு 438 கோடியும், குஜராத்துக்கு 426 கோடியும் வழங்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.இது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே இவ்வளவு வேறுபாட்டை பிஜேபி என்று தான் பார்ப்பதை நிறுத்தும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் தமிழகத்திலிருந்து 14 விளையாட்டு வீரர்கள் சென்றிருக்கிறார்கள். ஆனால் நிதி என்று பார்த்தால் வெறும் 20 கோடியே 40 லட்சம் ரூபாய் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.