பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கருடன் இணைந்து இந்திய வீரர் சரபோஜித் சிங் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரபோஜித் சிங் பயிற்சியாளர் அபிஷேக் ராணா, ஓய்வில்லாமல் உழைத்ததற்கான பரிசு தங்களுக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பாரிசில் உள்ள மைக்கேல் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் தனிப்பட்ட நபர் பிரிவில் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த பிறகு யாராக இருந்தாலும் நிச்சயமாக ஏமாற்றம் அடைவார்கள்.

அதிலிருந்து மீண்டு வர நிச்சயம் அனைவருக்குமே நேரம் ஆகும். ஆனால் சரபோஜித் சிங் அந்தத் தோல்வியில் இருந்து உடனடியாக மீண்டு வந்தார். அந்த தோல்வியை முதிர்ச்சியான முறையில் சரபோஜித் சிங் கையாண்டார். யாராக இருந்தாலும் தோல்விக்கு பிறகு நம்பிக்கையே போய்விடும்.
ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் சரிவிலிருந்து மீண்டு வர உழைக்க வேண்டும். அப்போதுதான் உயரத்தை அடைவார்கள். 2016 ஆம் ஆண்டிலிருந்து நான்தான் சரபோஜித் சிங்கின் பயிற்சியாளராக இருக்கின்றேன்.
தொழில் முறை துப்பாக்கிச் சூடு வீரராக எனது ஆலோசனையின் கீழ் தான் அவர் பயிற்சியை தொடங்கினார். சரபோஜித் சிங்கின் மனநிலை எப்போதுமே கடினமாக இருக்கும். எனக்கு சரபோஜத் சிங்கிடம் பிடித்த விஷயமே அவர் எப்போதுமே அனைவரின் அறிவுரையும் கேட்பார்.எனக்கு கலைப்பாக இருக்கிறது என்றெல்லாம் சாக்கு போக்கு கூறாமல் கடுமையாக உழைப்பார்.
மனு பாக்கரும், சரபோஜித் சிங்கும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். அவர்களும் இடையே நல்ல ஒரு பார்ட்னர்ஷிப் இருக்கின்றது. ஒருவருக்கொருவரை புரிந்து கொண்டு விளையாடுவார்கள். தனிநபர் பிரிவில் கூட ஒரு புள்ளி வித்தியாசத்தில் தான் அவர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்கள்.
ஆனால் தற்போது ஏமாற்றத்திற்குப் பிறகு மீண்டு எழுந்து சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். தங்களுடைய சிறந்த செயல்பாடு வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். இது இந்தியாவுக்கு ஒரு புதிய தொடக்கமாகும். தற்போது நல்ல ஒரு நினைவுகளுடன் ஊர் திரும்ப இருக்கின்றேன் என்று அபிஷேக் ராணா கூறியுள்ளார்.