பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர், சரபோஜத் சிங் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்திருக்கிறார்.
மனு பாக்கரின் இந்த சாதனைக்கு இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்திம் தலைவர் பி டி உஷா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பாரிசில் இருக்கும் நமது மைக்கேல் நிருபருக்கு பிடி உஷா அளித்த பேட்டியில், மனுபக்கர் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டாவது பதக்கம் வென்று இருப்பதை நினைத்து தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது.

சரபஜத் சிங் சிங் தன்னுடைய முதல் பதக்கத்தை வென்றிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒவ்வொரு வீரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர்கள் இருப்பது மிகவும் முக்கியம் என்பதை நான் எப்போதுமே நம்புவேன்.
இது வெறும் ஆரம்பம் தான். இன்னும் நிறைய பதக்கங்களை இந்திய வீரர் வீராங்கனைகள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் வீரர்களுக்கு பல உலகத் தர வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. நமது பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி இந்திய வீரர்களுக்கு உலக தரம் வாய்ந்த வசதிகளை ஆதரவுகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.
இந்திய அரசு கொடுத்துள்ள உதவியின் காரணமாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் சிறப்பான முறையில் தயாராகி வந்தார்கள். இதன் மூலம் வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் பயிற்சி மற்றும் அனைத்து வசதிகளும் இணைந்து சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இந்திய வீரர்கள் மேலும் பல பதக்கங்களை பெற்று குவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. சிறந்த பயிற்சி மற்றும் தயாரிப்பு பணிகள் எப்போதுமே வீரர்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும் என்று பிடி உஷா கூறியுள்ளார்.