பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இஸ்ரேல் வீரர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பாலஸ்தீன் மக்களுக்காக போராடும் ஹமாஸ் குழுவின் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியா டெகரானில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் இஸ்மாயில் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதை இஸ்ரேல் தான் செய்தார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் இது உலக அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியே செல்லாமல் இருக்கிறார்கள்.
மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் வெளியே சுற்றி வரும் நிலையில் இஸ்ரேல் வீரர்கள் மக்களின் கோபத்திற்கு ஆளாகலாம் என்பதால் மைதானத்திலும் விளையாட்டு கிராமத்திலும் முடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே 1972 ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக் போட்டியில் பாலஸ்தீன் பிரச்சனை காரணமாக 11 இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இதனால் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்து விடாமல் இருப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் உயிரிழந்திருப்பதால் அந்த இயக்கத்தினர் பாரிஸ் ஒலிம்பிக்கை குறிவைத்து ஏதேனும் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக இஸ்ரேல் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.