பாரிஸ்: ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இறுதிப்போட்டி நடக்கும் நாளன்று காலையில் அவரது எடை 50 கிலோவிற்கு 100 கிராம் அதிகமாக இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தங்கப் பதக்கமா அல்லது வெள்ளிப் பதக்கமா என்ற கனவுடன் இருந்த இந்திய மக்களுக்கு இந்த செய்தி பேரிடியாக அமைந்தது. இதன்பின் வினேஷ் போகத்திற்கு பதக்கம் கிடையாது என்று வெளியேற்றப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டி சார்பாக முறையீடு செய்யப்பட்டது.

மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் ஒலிம்பிக் நிர்வாகத்தை எதிர்த்து வினேஷ் போகத் மற்றும் இந்திய ஒலிம்பிக் கமிட்டி தொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட விளையாட்டு தீர்ப்பாயம், விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது. இதன் தீர்ப்பு நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3வது முறையாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் விளையாட்டு தீர்ப்பாயம் தாமதம் செய்வது, பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய ஹாக்கி ஜாம்பவான் ஸ்ரீஜேஷ் பேசுகையில், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முதல் நாள் வினேஷ் போகத்தை சந்தித்தேன்.
அப்போது அவர் சோகத்தை மறைத்து சிரித்த முகத்துடன் எங்களுக்கு வாழ்த்து கூறினார். அவர் ஒரு உண்மையான போராளி தான். அந்த சூழ்நிலையில் கூட எங்களுக்கு வாழ்த்து கூற தவறவில்லை. வினேஷ் போகத் விவகாரத்தில் 2 பார்வைகள் உள்ளது. முதல் பார்வை, அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பின்னரே தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதனால் அவருக்கு நிச்சயம் பதக்கம் கிடைத்திருக்கும்.
வினேஷ் போகத் இடத்தில் நான் இருந்திருந்தால், அந்த நேரத்தில் என்ன செய்திருப்பேன் என்றே தெரியாது. இந்த விவகாரத்தில் இன்னொரு பார்வை என்னவென்றால், ஒலிம்பிக் விதிமுறைகள் தான். அதற்கு இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தயாராக இருக்க வேண்டும். எந்த சூழலிலும் நாம் ஃபெடரேஷனுக்கோ, ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பை கூட கொடுத்துவிட கூடாது. இது அனைவருக்குமான பாடமாகவே கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.