மும்பை: ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை அதிகரிப்பால், எந்த பதக்கமும் இல்லை என்று வெளியேற்றப்பட்டார். இதனை எதிர்த்து விளையாட்டு தீர்ப்பாயம் வரை சென்ற போதும், அவருக்கான பதக்கம் கிடைக்காதது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அரையிறுதி முடிவடைந்த பின் வினேஷ் போகத் எடை 2.7 கிலோ எடை கூடிய பின் நடந்த சம்பவங்கள் குறித்து அவரின் பயிற்சியாளர் அகோஸ் பதிவிட்டுள்ளார். அதில், அரையிறுதி போட்டி முடிவடைந்த பின் வினேஷ் போகத் எடை 2.7 கிலோ அதிகரித்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக ஒரு மணி 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்த போது, 1.2 கிலோ எடை குறைந்தது.

அதன்பின் 50 நிமிடங்கள் நீராவி மூலம் உடல் எடையை குறைக்க முயற்சித்தோம். ஆனால் அவர் உடலில் இருந்து ஒரு துளி வியர்வை கூட வரவில்லை. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நள்ளிரவு முதல் அதிகாலை வரை உடற்பயிற்சி கூடத்தில் பல்வேறு பயிற்சிகளை செய்து கொண்டே இருந்தோம். ஒவ்வொரு செஷனும் 20 நிமிடங்களாக பிரித்து பயிற்சி அளித்தோம்.
ஒவ்வொரு செஷனிற்கு இடையில் வெறும் 2 நிமிடங்கள் தான் ஓய்வு அளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வினேஷ் போகத் சரிந்து விழுந்துவிட்டார். பின்னர் மீண்டும் நீராவி மூலம் வியர்வையை வெளியேற்றும் பணியை தொடங்கினோம். அப்போது வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என்று பயந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பதிவை சில மணி நேரங்களிலேயே பயிற்சியாளர் அகோஸ் நீக்கியுள்ளார்.
தொடர்ந்து பாரிஸ் மருத்துவமனையில் இருந்து வினேஷ் போகத் திரும்பின் பின் பயிற்சியாளர் அகோஸ் உடன் பேசுகையில், நீங்கள் சோகமாக இருக்க கூடாது. நெருக்கடியான நேரத்தில் எனக்கு கூடுதல் எனர்ஜி தேவையென்றால், உலகின் சிறந்த மல்யுத்த வீராங்கனையான ஜப்பானின் சுசாகியை வீழ்த்தியதை நினைத்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்கள். எனது கனவினை நான் எட்டிவிட்டேன்.
உலகின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனைகளில் நானும் ஒருவர் என்பதை நிரூபித்துவிட்டேன். நமது ஆட்ட நுணுக்கங்களும், திட்டங்களும் செயல்பட்டதை நிரூபித்துவிட்டோம். பதக்கம் உள்ளிட்டவை உலகிற்காக தான். நான் விளையாடியதை யாராலும் எடுத்துகொள்ளவோ, மறைக்கவோ முடியாது என்று கூறியதாக பதிவிட்டுள்ளார்.