பாரிஸ்: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வென்ற முதல் அல்ஜீரியா வீராங்கனை என்ற சாதனையை இமான் கலீஃப் படைத்துள்ளார். காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா அன்னாவை 5-0 என்று வீழ்த்தியதன் மூலமாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதோடு, பதக்கத்தையும் உறுதி செய்து அசத்தியுள்ளார்.
ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்ஜீரியாவின் இமான் கலீஃபை எதிர்த்து இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரிணி களமிறங்கினார். இந்த போட்டி தொடங்கப்பட்டு 46 நொடிகளில் இத்தாலி வீராங்கனை கரிணி ஆட்டத்தை நிறுத்தினார். அதுமட்டுமல்லாமல் அல்ஜீரியாவின் இமான் கலீஃப் ஒரு பெண்ணே கிடையாது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதனால் சர்வதேச அளவில் மகளிர் குத்துச்சண்டையில் எப்படி ஒரு ஆடவரை களமிறக்கலாம் என்று சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இமான் கலீஃப் பெண் என்றும், இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே சில முறை சர்வதேச அளவிலான குத்துச்சண்டை பாலின சர்ச்சையால் கலீஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் இத்தாலி வீராங்கனை திட்டமிட்டே கலீஃப் மீது இந்த குற்றச்சாட்டை வைத்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரியைச் சேர்ந்த லூகா அன்னா ஹமோரியை எதிர்த்து இமான் கலீஃப் களமிறங்கினார். இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் இமான் கலீஃப் வெற்றிபெற்றார். இதன் மூலமாக இமான் கலீஃப் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதோடு, ஒலிம்பிக் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார்.
அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ஒலிம்பிக் பதக்கத்தை பெறுவது இதுவே முதல்முறையாகும். சோசியல் மீடியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இமான் கலீஃப் மீது வெறுப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், பதக்கத்தை உறுதி செய்த மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு வெளிப்படுத்தினார். அந்த வீடியோ இமான் கலீஃப் ஆதரவாளர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.