பாரிஸ்: டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்று சாதனை படைத்திருந்தது. இதனால் இம்முறை மீண்டும் பழைய இந்திய அணியாக மாறி தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கேற்ப இந்திய அணியில் அனுபவ வீரர்கள், அறிமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் முதல் நாளான இன்று இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. தரவரிசையில் 7வது இடத்த்தில் இந்திய அணியும், 10வது இடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளனர். இதன்பின் இரு அணிகளும் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், முதல் குவார்ட்டரிலேயே நியூசிலாந்து முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது.

அடுத்த 20 நிமிடங்களில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நட்சத்திர வீரர் மன்தீப் சிங் இந்திய அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் பின் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் இருந்தனர். பின்னர் பரபரப்பான 3வது குவார்ட்டர் தொடங்கியது. அதில் இந்திய அணியின் விவேக் அபாரமாக ஒரு கோலை அடித்து 2-1 என்று முன்னிலை பெற வைத்தார்.
இதன்பின் கடைசி 20 நிமிடத்தில் 8 நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் நியூசிலாந்து அணி திடீரென ஒரு கோலை அடித்து அதிர்ச்சி கொடுத்தது. இதனால் 2-2 என்று சமநிலை ஏற்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு கட்டாயம் ஒரு கோல் தேவையென்ற நிலையில், நியூசிலாந்து அணி வீரர்களின் கடைசி கடைசி நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது.
அதனை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கோலாக்க இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை பெற்றது. இதன் மூலமாக இந்திய அணி பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்பின் நாளை மறுநாள் நடக்கவுள்ள 2வது குரூப் போட்டியில் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வலிமையான அர்ஜென்டினா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.