பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் தங்கத்தை குவித்து வருகிறது. இன்னும் இந்தியா தங்களது பதக்க கணக்கை தொடங்கவில்லை.
இந்த நிலையில், இந்தியா சார்பாக பேட்மிண்டனில் கடந்த 2 ஒலிம்பிக்கிலும் பிவி சிந்து பதக்கம் வென்று அசத்திய நிலையில், ஒலிம்பிக்கின் 2வது நாளில் பிவி சிந்து தனது முதல் சுற்று போட்டியில் மாலத்தீவைச் சேர்ந்த ஃபாதீமாத்-ஐ எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை 21-9 என்று கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை 21-6 என்று கைப்பற்றி வென்றார். 30 நிமிடங்களுக்குள் இந்த ஆட்டம் முடிவடைந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது , இதனையடுத்து சிந்து தனது 2வது போட்டியை வரும் புதன்கிழமை தரவரிசையில் 73வது இடத்தில் உள்ள கிறிஸ்டனை எதிர்கொள்ள உள்ளார்.
துடுப்புப் படகு போட்டியில் Repechage சுற்றில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 2வது இடத்தை பிடித்து 7 நிமிடங்கள் 12 நொடிகளில் பந்தய தூரத்தை எட்டி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் காலிறுதியில் பல்ராஜ் பங்கேற்கிறார். இந்த நிலையில் Repechage முறை என்றால் என்னவென்று தற்போது பார்க்கலாம்.
தகுதி சுற்றில் தோல்வி அடையும் நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதே இந்த ரீப்சேஜ் சுற்றாகும். நடப்பு ஒலிம்பிக்கில் முதல் முறையாக தடகளம் மற்றும் படகுப் போட்டி, ஜூடோ, டக்வாண்டோவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தகுதி சுற்றில் முதல் 3 இடங்கள் பிடிப்பவர்கள் நேரடியாக அரையிறுதிக்கு செல்லும் நிலையில், தோல்வி அடைந்தவர்களுக்கு என ஒரு பந்தயம் நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றவர்கள் காலிறுதிக்கு செல்வார்கள். அதில் வென்று அரையிறுதியில் மீண்டும் பதக்கம் வெல்ல வாய்ப்பு கிடைக்கும். படகுப் போட்டியிலும், தடகளத்திலும் இந்த முறையிலேயே ரீப்சேஜ் சுற்று நடைபெறும்.