பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் கோலகலமாக தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க 10,700க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளில் இருந்தும் குவிந்துள்ளனர். இதனிடையே ஒலிம்பிக் தொடக்க விழா வழக்கம் போல் மைதானத்தில் நடத்தாமல், ஷெய்ன் நதியில் பிரான்ஸ் அரசு வித்தியாசமாக நடத்தியது.
வழக்கமாக பேரணியாக நடந்து வரும் வீரர்கள், இம்முறை கப்பலில் அணிவகுப்பு நடத்தினர். ஒரு பக்கம் வீரர்களின் அணிவகுப்பு, இன்னொரு பக்கம் கலை நிகழ்ச்சிகள் என்று தொடக்க விழா மிரட்டலாக அமைந்தது. ஷெய்ன் நதியை சுற்றியுள்ள தெருக்கள், வீடுகள், கட்டடங்கள் என்று அனைத்து திசைகளிலிலும் கொண்டாட்டங்கள் உச்சத்தை தொட்டிருந்தன.

பாரிஸின் கலாச்சாரம், பிரெஞ்சு புரட்சி, மோன லிசா ஓவியம், லேடி காகா இசை நிகழ்ச்சி, லேசர் கண்காட்சி இறுதியாக ஈபிள் டவர் ஒளி விளக்குகளால் ஜொலித்தது என்று பார்வையாளர்கள் கண்முன் மேஜிக் காட்சிகள் அரங்கேறின. இந்த தொடக்க விழாவை காண்பதற்காக 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை வாங்கினர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவை இத்தனை லட்சம் பார்வையாளர்கள் நேரடியாக காண்பது இதுவே முதல்முறையாகும். இதனால் மைகேல் தளம் சார்பாக நேரடியாக செய்தியாளரும் பாரிஸ் நகரில் செய்திகளை சேகரித்து வருகிறார். இந்த தொடக்க விழாவின் போது இந்திய ரசிகர்கள் சிலர் பாரிஸ் தெருக்களில் வைப் செய்து கொண்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மைகேல் தளத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், நாங்கள் விளையாட்டை பார்ப்பதை விடவும் வைப் செய்வதற்கே வந்திருக்கிறோம். பாரிஸ் நகரில் எக்ஸ்ப்ளோர் செய்வதற்கு இது சிறந்த தருணம் என்று நினைக்கிறோம். மழை பெய்து வந்தாலும், வீடுகளில் இருந்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நாங்கள் எந்த டிக்கெட்டையும் வாங்கவில்லை. இந்த வைப்பில் இணைவதற்கே வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து பேசுகையில், நாங்கள் பிவி சிந்து பதக்கம் தங்கப் பதக்கம் வெல்வார் என்று நம்புகிறோம். அதேபோல் நீரஜ் சோப்ராவும் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு டிக்கெட் இல்லாமல் ரசிகர்கள் அனுமதிப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.