பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள போட்டிகளின் அட்டவணையை பார்க்கலாம். இதுவரை இந்திய அணி 2 வெண்கலம் மட்டுமே வென்றுள்ள நிலையில், 3வது பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
33வது ஒலிம்பிக் தொடர் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 நாட்கள் முடிவடைந்த நிலையில், 6ஆம் நாளில் இந்திய அணி வீரர்கள், வீராங்கனைகள் ஏராளமான போட்டிகள் பங்கேற்கவுள்ளன. இதன்படி ஆடவருக்கான கோல்ஃப் விளையாட்டு போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் புல்லர் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டி மதியம் 12.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

அதேபோல் துப்பாக்கிச் சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் ஆட்டத்தில் ஸ்வப்னில் குசாலே பங்கேற்கவுள்ளார். இந்த போட்டி மதியம் 1 மணிக்கு நடக்கவுள்ளது. அதேபோல் மதியம் 1.30 மணிக்கு இந்தியா - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான குரூப் போட்டி நடக்கவுள்ளது. பின்னர் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான வில்வித்தையில் இந்தியாவின் ஜாதவ் பங்கேற்கும் ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு நடக்கவுள்ளது.
தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதலில் மகளிருக்கான 50 மீ ரைபிள் 3பி போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா பங்கேற்கவுள்ளார். இந்த போட்டி மதியம் 3.30 மணிக்கு நடக்கவுள்ளது. அதேபோல் மகளிருக்கான குத்துச்சண்டை ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை நிக்கட் ஜரீன் - சீனாவின் வூ மோதவுள்ளனர். இந்த ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
அதேபோல் மதியம் 3.30 மணிக்கு ஆடவருக்கான பாய்மர படக்கோட்டுதல் போட்டியில் விஷ்ணு சரவணன் மோதவுள்ளார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் ஆட்டத்திற்கு இறுதிப்போட்டியில் ஸ்வப்னில் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைக்கும். இதனை தவிர்த்து இன்று நள்ளிரவு டேபிள் டென்னிஸ் போட்டிக்கான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.