மும்பை: பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனைகளான மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகிய மூவரும் கவனம் ஈர்த்தனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறி சாதனை படைத்தனர்.
அதேபோல் டேபிள் டென்னிஸ் அணியாகவும் இவர்கள் மூவரும் இணைந்து விளையாடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தனர். காலிறுதிப் போட்டியில் இந்திய அணியில் அர்ச்சனா காமத் மட்டுமே ஒரேயொரு சுற்றில் வெற்றிபெற்றிருந்தார். இதனால் வரும் காலங்களில் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகிய மூவரும் இந்திய டேபிள் டென்னிஸின் முகமாக இருப்பார்கள் என்று கருதப்பட்டது.

இருந்தாலும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக பதக்கம் வெல்வார்களா என்ற கேள்விக்கு பதில் முழுமையாக கிடைக்கவில்லை. ஏனென்றால் பல தசாப்தங்களாக சீனா மற்றும் கொரியா வீராங்கனைகள் டேபிள் டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் 24 வயதாகும் அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அர்ச்சனா காமத் அவரின் பயிற்சியாளர் கார்க் உடன் நீண்ட ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர்வதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னேறினால் மட்டுமே பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும். இந்தியாவில் ஸ்பான்சர்ஷிப் கிடைத்தாலும், அர்ச்சனா காமத் படிப்பை தொடர்வதில் உறுதியாக இருக்கிறார். இதுகுறித்து அர்ச்சனா காமத் பேசுகையில், எனது சகோதரர் நாசாவில் பணியாற்றி வருகிறார்.
அவர் தான் எனது ரோல் மாடல். படிப்பை தொடரப் போகிறேன் என்று கூறிய போதும் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். படிப்பை நல்லபடியாக முடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொருளாதார தொடர்புடைய படிப்பை அர்ச்சனா காமத் படிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், வளர்ந்து வரும் வீரர்களுக்கு டேபிள் டென்னிஸில் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை என்று அவரின் பயிற்சியாளர் கார்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.